நேபாள நிலச்சரிவால் மண்ணில் புதைந்த 6 மலைக் கிராமங்கள்: 41 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் ஏற்பட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாடு நிலைகுலைந்து போயுள்ளது. நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்நிலையில் நேபாளத்தின் வடகிழக்கு மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவால் மலைப்பகுதியில் உள்ள 6 கிராமங்கள் மண்ணில் புதைந்து போயுள்ளன. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இது வரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
6 கிராமங்கள் புதையுண்டதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அந்த கிராமங்களைச் சேர்ந்த பலர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.