சீனாவின் ‘வான் பாதுகாப்பு மண்டலம்’: 19 நாடுகளின் 55 விமான நிறுவனங்கள் ஏற்பு
பீஜிங்: 19 நாடுகளைச் சேர்ந்த 55 விமான நிறுவனங்கள் தங்களின் கிழக்கு சீனக் கடல் மீதான வான் பாதுகாப்பு மண்டலத்தை (ADIZ) ஏற்றுக்கொண்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீனா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரி வரும் பிரச்சினைக்குரிய டயோயு தீவுகளின் மேல் அமைந்துள்ள வான் மண்டலத்தில் பறப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என சீனா தெரிவித்திருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட விதமாக 19 நாடுகளைச் சேர்ந்த 55 விமான நிறுவனங்கள் சர்ச்சைக்குரிய வான் மண்டலத்தில் பறப்பதற்கு முன்னதாக தங்களது விமானத் திட்டங்களை சீனாவிடம் முன்கூட்டியே தெரிவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனவாம்.
சீனாவின் இந்த அதிரடி உத்தரவுக்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடெனின் வருகைக்கு மத்தியிலும் சீனா இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்னர், டோக்கியோவில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார் அமெரிக்க துணை அதிபரான ஜோ பிடென். அப்போது சீனாவின் வான் பாதுகாப்புத் திட்டம் குறித்த தனது கவலையை அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவும், ஜப்பானும் கிழக்கு சீனக்கடல் பகுதியில் தங்களது போர் விமானங்களைப் பறக்க விட்டதைத் தொடர்ந்து, சீனாவும் தனது போர் விமானத்தை அப்பகுதியில் பறக்க விட்டது. இதற்கு அமெரிக்கா தனது ஆட்சேபணையைத் தெரிவித்துவந்த போதிலும், அமெரிக்க விமான நிறுவனங்களை சீனாவின் ஒப்புதலைப் பெறுமாறும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..
ஆயினும், சீனப் பத்திரிகைகள் ஜப்பான் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தடை செய்தபின்னரே அமெரிக்கா தங்கள் பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளன.