ஈரானில் பயங்கர நிலநடுக்கம்.. 7 பேர் பலி - 400 பேர் படுகாயம் - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்
ஈரான் நிலநடுக்கத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தெஹ்ரான்: ஈரானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருப்பதால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் உடனடியாக தெரியவரவில்லை.
இதனிடையே, படுகாயமடைந்தவர்களின் பெரும்பாலானோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பயங்கர நிலநடுக்கம்
ஈரானின் வடகிழக்கு மாகாணமான அஸர்பைஜானில் உள்ள கோய் நகரில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களும், வீடுகளும் பயங்கரமாக குலுங்கின. பல வீடுகள் சில நொடிகளிலேயே விழுந்து தரைமட்டமாகின. வீடு குலுங்கியதை உணர்ந்த மக்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

7 பேர் பலி.. 430 பேர் மீட்பு
இதையடுத்து, உடனடியாக அங்கு விரைந்து வந்த ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதலாக மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இதில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 430 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
படுகாயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனவே, பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடிக்கடி நிலநடுக்கம்
ஈரான் அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்று ஆகும். தினமும் ஒரு நிலநலடுக்கம் என்பது ஈரானில் சகஜம். ஆனால், சக்திவாயந்த நிலநடுக்கம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 26,000 பேர் பலியாகினர். கடந்த 2017-ம் ஆண்டு நேரிட்ட நிலநடுக்கத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications