செல்பிக்கு அடிமையா... அப்படீன்னா நீங்க நம்பர் ஒன் சுயநலக்காரராம்!
ஓஹியோ: செல்பி புகைப்படம் எடுப்பதில் அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவதாக ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற நம்பிக்கை குறைந்து, கையிலிருக்கும் செல்போன்களால் காலத்தை ஆவணப் படுத்தும் காலம் இது. அதிலும், குறிப்பாக தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் செல்பி மோகம் அதிகமாகவேக் காணப்படுகிறது.
இந்நிலையில், செல்பி எடுப்பவர்களின் மனநிலை குறித்து ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
ஆய்வு...
அதன்படி, 18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை வைத்தும், ஆளுமைப் பண்புகளை நிறுவுவதற்கான உளவியல் கேள்விகளுக்கு பதில் எழுதச்செய்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சுயமோகம்...
இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் பல வெளிவந்துள்ளதாக பேராசிரியர் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘செல்பி எடுப்பவர்கள் சுய மோகம் கொண்டவர்கள் என்பது சாதாரண விஷயம் தான்.
எச்சரிக்கை...
ஆனால் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவர்கள் சராசரியை விட அதிகமான சமூக விரோத பண்புகளை கொண்டிருப்பதும், தன்னையே காட்சி பொருள் போன்று பார்ப்பதும் தான்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் அதிக பிரச்சனைகளை உண்டாக்கும் என எச்சரித்துள்ளார் ஃபாக்ஸ்.
பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்...
இதேபோல், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மூன்றில் இரண்டு பேருக்கு "பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்" எனப்படும் மன நோய் இருப்பதாகவும், அவர்கள் அதிக அளவு செல்பி எடுக்கும் இயல்புடையவர்கள் என்றும் மனநல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை முயற்சி...
தன்னுடைய தோற்றம் குறித்த கற்பனையும், பயமும் செல்பி எடுப்பவர்களிடம் அதிகமாக காணப்படுவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர், செல்பியில் தன் தோற்றம் திருப்திகரமாக இல்லாததால் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.