லிபியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்.! ஐநா கடும் கண்டனம்.. நியாயமான விசாரணைக்கு அழைப்பு
தஜோரா: லிபியா நாட்டில் அகதிகள் முகாம் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல் சம்பவத்திற்கு, ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு சுதந்திரமான இடையூறு இல்லாத விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளுக்கும் - கலீஃபா ஹப்தார் தலைமையிலான லிபிய தேசிய ராணுவம் படையினருக்கும் கடும் போர் நடந்து வருகிறது.

இரு தரப்பினரும் தீவிர துப்பாக்கி சண்டை மற்றும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். லிபிய தலைநகர் திரிபோலியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில், கிளர்ச்சி படையினர் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் இருந்து முறையான ஆவணமின்றி குடியேற, கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் முக்கிய இடமாக லிபியா உள்ளது.எதியோப்பியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் லிபிய தலைநகர் திரிபோலி அருகே உள்ள தஜோரா என்ற இடத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது திடீர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அகதிகள் முகாமிலிருந்த 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய திரிப்போலிக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தஜோராவில் நடைபெற்ற இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலீஃபா ஹப்தார் தலைமையிலான லிபியதேசிய ராணுவம் படையே இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு உலகநாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒன்றுமறியாத அப்பாவி அகதிகள் மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் போர்க்குற்றம் என்றே கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள லிபிய தேசிய ராணுவ செய்தி தொடர்பாளரான ஜெனரல் கலீத் எல்-மஹ்ஜூப், எங்களது இலக்கு தஜோரா சுற்றுவட்டாரத்தில் இருந்த எதிரிகள் தான். அவர்களை குறி வைத்து தாக்கவே உத்தரவிடப்பட்டது. அகதிகள் முகாமை தாக்க உத்தரவிடவில்லை என கூறியுள்ளார்.
லிபிய வான்வழி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், கொடூரம் மற்றும் மூர்க்கத்தனமான இந்த வான்வழி தாக்குதல் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அகதிகள் முகாம் மீதான தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இரக்கமற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications