ஜெர்மனியில் பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ஆப்கான் முன்னாள் அமைச்சர்.. புகைப்படங்கள் வைரல்!
பெர்லின்: ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த சையத் அகமது ஜெர்மனியில் உணவு டெலிவரி வேலை செய்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சரியாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் இந்த சையத் அகமது.

முன்னாள் அமைச்சர்
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020-ல் சையத் அகமது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் குடியேறினார். அதாவது ஆப்கானை தாலிபான்கள் ஆப்கானை முற்றுகையிடுவதற்கு முன்பே சையத் அகமது நாட்டை விட்டு வெளியேறி விட்டார். 2005 முதல் 2013 வரை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் உட்பட பல அரசு பதவிகளை வகித்துள்ளார் சையத் அகமது.

பீட்சா டெலிவரி
மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலை பட்டத்தை சையத் அகமது பெற்றுள்ளார். இது தவிர 13 நாடுகளைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது லீப்ஜிக் நகரத்தில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருவதாக லீப்ஸிகர் வோல்க்ஸீய்டங் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

புகைப்படங்கள் வைரல்
ஜெர்மனியில் உணவு டெலிவரி விநியோகம் செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆரஞ்சு சீருடையில் ஒரு சைக்கிளில் பீட்சா பேக் மாட்டியபடி சையத் அகமது இருக்கும் புகைப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் மளிகைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு போகும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பண நெருக்கடி
ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக சையத் அகமது ஜெர்மனி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஆப்கான் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கேயே தங்கி விட்டார். சில மாதங்களில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் பீட்சா டெலிவரி செய்பவராக வேலை செய்ய வேண்டிய நெருக்கடிக்கு சையத் அகமது தள்ளப்பட்டார். இப்போது தனது சைக்கிளில் நகரத்தை சுற்றித் திரிந்து வீடு வீடாக உணவு விநியோகம் செய்து வருகிறார்.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்
இது தொடர்பாக சையத் அகமது கூறியதாவது:-நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஜெர்மனியில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். லீப்ஜிக்கில் எனது குடும்பத்துடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சம்பாதிக்கும் பணத்தை மிச்சப்படுத்தி ஒரு ஜெர்மன் படிப்பை மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன். பல வேலைகளுக்கு விண்ணப்பித்தேன் ஆனால் எங்கிருந்தும் பதிலும் வரவில்லை. எனது கனவு ஜெர்மன் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதாகும் என்று கூறினார்.

நெட்டிசன்கள் பாராட்டு
அதே வேளையில் தற்போது ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில் அது குறித்து அதிகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட சையத் அகமது, அஷ்ரப் கனி அரசு இவ்வளவு சீக்கிரம் வீழ்ச்சியடையும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். உணவு டெலிவரி வேலை செய்யும் முன்னாள் அமைச்சர் சையத் அகமதுவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சியை பிடித்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி கோடி, கோடியாக பணத்துடன் தப்பி ஒடி விட்டார் என செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு கீழே இருந்த அமைச்சர் உழைத்து வாழ வேண்டும் என்று நேர்மையாக செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications