"கட்டாயப்படுத்துகிறார்!" கண்கலங்கி நிற்கும் பெண் செய்தியாளர்கள்.. தொடரும் தாலிபான் அடாவடி! என்னாச்சு
காபூல்: ஆப்கன் அரசு பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் வகையில் பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டுமொத்தமாகத் தாலிபான் அமைப்பினர் தனது கட்டுப்பாட்டில் கொண்ட வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் கைகளில் ஆப்கன் வந்தது.
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளில் பெண் உரிமைக்குப் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது சமூக ஆர்வலர்கள் இதில் தான் கவலையை எழுப்பி இருந்தனர்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை... பெண்களுக்கான புதிய கட்டுப்பாடு... ஆப்கன் அரசு பரபர உத்தரவு
ஆப்கன் அரசு
முதலில் ஆட்சியைப் பிடித்த போது, பெண் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பெண்கள் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றே கூறினர். ஆனால், உண்மையில் அவர்கள் சொல்வது ஒன்றும் நடப்பது ஒன்றுமாகவே உள்ளது. முதலில் இருபாலர் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்குத் தடை விதித்த அவர்கள், அதன் பின்னர் பெண் உரிமைகளை ஒடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
உத்தரவு
பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, தங்கள் முகம் உட்பட முழு உடலை மறைக்கும் வகையிலான பாரம்பரிய பர்தா உடையை அணிய வேண்டும் என்று ஆப்கன் அரசு உத்தரவிட்டிருந்தது, மேலும், ஆப்கன் நாட்டில் டிவி சேனல்களில் பணிபுரியும் அனைத்து பெண்களும் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
கட்டாயப்படுத்துகிறார்கள்
இதற்கு அங்குள்ள பெண் செய்தி வாசிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், முகத்தை மறைக்கும்படியான ஆடையை அணியாத பெண் தொகுப்பாளர்களுக்கு வேறு பணி வழங்க வேண்டும் அல்லது அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆப்கன் அரசு மறைமுக அழுத்தம் தருவதாக அங்குள்ள பெண் செய்தியாளர்கள் கூறி உள்ளனர். இது குறித்து ஆப்கன் பெண் செய்தியாளர் சோனியா நியாசி கூறுகையில், "நாங்கள் இதைத் திட்டவட்டமாக எதிர்த்தோம். முகத்தை மூடும் வகையிலான ஆடையை அணிய எதிர்ப்பு தெரிவித்தோம். இருந்த போதிலும், எங்களை இதுபோல முகத்தை மறைக்கும் வகையிலான ஆடையை அணிய எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
பணி நீக்கம்
இது தொடர்பாக ஆப்கனஅ தொடர்பாளர் முகமது அகிஃப் சதேக் மொஹாஜிர் கூறுகையில், "பெண் தொகுப்பாளர்களை வேலையை விட்டு நீக்கும் எண்ணம் எதுவும் இல்லை. அவர்களை வேலையில் இருந்து அகற்றவோ அல்லது ஓரங்கட்டவோ எந்த எண்ணமும் இல்லை. இருந்த போதிலும், ஊடக சேனல்கள் பொறுப்பாக இந்த உத்தரவைப் பின்பற்றியதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்" என்றார்.
ஆடைக்கட்டுப்பாடு
பெண்கள் முகம் உட்பட முழு உடை மறைக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும். இல்லையென்றால் அந்நாட்டின் பெண் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆப்கன் அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல ஆப்கன் அரசில் பணிபுரியும் ஆண்கள் தங்கள் மனைவிகள் அல்லது மகள்கள் ஆடை விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.