சதி..‛‛என்னை கொல்ல முயன்ற 3 பேர்’’.. யார் தெரியுமா? குண்டு பாய்ந்து உயிர் தப்பிய இம்ரான் கான் பகீர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் குண்டு காயமடைந்து உயிர் தப்பிய இம்ரான் கான், தன்னை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற நபர்கள் என பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டுள்ள நிலையில் விசாரணை தீவிரமாகி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். இவர் பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் (பிடிஐ) எனும் கட்சியை துவக்கி அரசியலில் நுழைந்தார்.
2018 பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 2018 முதல் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றார்.
இம்ரான் கான் காலில் பாய்ந்த குண்டு.. கண் இமைப்பதற்குள் மளமளவென சுட்டுதள்ளிய நபர்.. நடந்தது என்ன?
இம்ரான் கான் பேரணி
இந்நிலையில் தான் இம்ரான் கானின் கூட்டணி ஆட்சி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் ஆட்சியையும், பிரதமர் பதவியையும் இழந்தார். புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வாகி உள்ளார். இந்நிலையில் தான் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் போராட்டம் நடத்தி வருகிறார். இன்று வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் பேரணி நடந்தது.
இம்ரான்கானை துளைத்த குண்டு
இந்த பேரணியில் இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. கண்இமைக்கும் நேரத்தில் மர்மநபர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. மொத்தம் 9 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார். இம்ரான் கான் உள்பட காயமடைந்த 9 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டு
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஆளும் கட்சியினர் உள்ளனர். குறிப்பாக தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருப்பதாக இம்ரான் கானின் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இதுபற்றிய விபரங்களை தெரிவித்துள்ளார். பிரதமர்ர் ஷேபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 3 பேர் தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பின்னணியில் உள்ளதாக அவர் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
யார் அந்த 3 பேர்?
இதுதொடர்பாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களாக உள்ள ஆசாத் உமர் மற்றும் மியான் அஸ்லாம் இக்பால் ஆகியோர் கூறியதாவது: சிறிது நேரத்திற்கு முன்பு இம்ரான் கான் சம்பவம் தொடர்பாக அவர் சார்பில் அறிக்கை வெளியிடும்படி கூறினார். அதன்படி இந்த துப்பாக்கி சூடு சம்பவம் 3 பேரால் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் நம்புகிறார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் உள்ளிட்டோர் பின்னணியில் இருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்'' என்றார்.
விசாரணை தீவிரம்
இம்ரான் கான் தரப்பு இப்படி குற்றம்சாட்டும் நிலையில் தான் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.