கமேனி இடத்திற்கு புதிய தலைவர்.. ஈரானில் உயர்மட்ட பொறுப்பில் அயோதுல்லா அராபி நியமனம்! யார் இவர்?
தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய கொடூர தாக்குதலில், அந்நாட்டின் தலைமை மதகுருவும், உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயோதுல்லா அலிரெசா அராபி நியமனம் செய்யபட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட்டு விட்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்
இதனை ஈரான் ஏற்கவில்லை. ஈரானில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தையும் அமெரிக்காவே தூண்டிவிட்டதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பான மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்ற நிலையில் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் நிலை உருவானது.
இதை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா தனது படை பலத்தை மத்திய கிழக்கில் குவித்தது. இதற்கிடையே நேற்று ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டன. ஈரானின் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.
அலி கமேனி கொல்லப்பட்டார்
தலைநகர் தெஹ்ரானில் குண்டுமழை பொழிந்தன. இதில் ஈரானின் தலைமை மதகுருவும், உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனியின் வீடு - தலைமை அலுவலகம், அதிபர் மாளிகை, ஈரானின் உளவுத்துறை அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அந்த கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (வயது86) கொல்லப்பட்டார். இதனை உறுதி செய்த ஈரான், ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. ஈரான் தூதரகங்களில் அந்நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அனைத்து பொறுப்புகளையும் கவனிப்பார்
அயோதுல்லா கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயோதுல்லா அலிரெசா அராபி நியமனம் செய்யபட்டுள்ளார். ஈரானில் அரசியல் அமைப்பு விதிகளின் படி புதிய உச்ச தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இவரே அனைத்து பொறுப்புகளையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால கவுன்சிலின் தலைவராக அயோதுல்லா அராபி நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்தக் குழுவில் அதிபர் மசூத் பெஸெஸ்கியான், தலைமை நீதிபதி கோலம் ஹூசைன் எஜே மற்றும் கார்டியன் கவுன்சில் இருந்து ஒரு மத குரு ஆகியோர் இடம் பெறுவர். இந்தகுழுவே ஆட்சி மாற்ற காலக்கட்டத்தில் இணைந்து நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அயோதுல்லா அலிரெசா அராபி
தற்போது இடைக்கால உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அராபி, 1959 ஆம் ஆண்டு பிறந்தவர். யாஸாத் மாகாணத்தில் உள்ள மேய்பாட் பகுதியை சேர்ந்த மத குரு குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை அயத்துல்லா (ஷேக் ஹாஜி) முகம்மது இப்ராஹிம் ஆரஃபி, 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஈரான் இஸ்லாமிய குடியரசை நிறுவிய ருஹெல்லா காமேனி-க்கு நெருங்கியவர் என ஈரான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications