'அகஸ்தியர் மலை' உயிர்க்கோள் காப்பக பகுதி.. சான்றிதழ் வழங்கியது யுனெஸ்கோ!
அகஸ்தியர் மலைக்கு உயிர்க்கோள் காப்பக பகுதி என யுனஸ்கோ அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.
பாரீஸ்: அகஸ்தியர் மலைக்கு உயிர்க்கோள் காப்பக பகுதி என யுனஸ்கோ அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த சான்றிதழ் தமிழக வனத்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் உறுப்பினர்கள் கூட்டம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் உலக உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் புதிதாக 20 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் பரந்து விரிந்துள்ள அகஸ்தியர் மலையும் இடம்பெற்றது. 3500.36 ச.கி.மீ பரப்பளவு கொண்ட அகஸ்தியர் மலை 1672 ச.கி.மீ பகுதி தமிழகத்திலும், 1828 ச.கி.மீ பகுதி கேரளாவிலும் உள்ளது.
26 சிகரங்கள் கொண்ட இந்த அகஸ்தியர் மலையில் தாமிரபரணி ஆறு, கரமனா ஆறு மற்றும் நெய்யார் ஆறு போன்றவை உற்பத்தியாகின்றன. 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும் இந்த அகஸ்தியர் மலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த அகஸ்தியர் மலை உலக உயிர்க்கோள் காப்பக பகுதி என யுனஸ்கோ சான்றிதழ் வழங்கியது. இதற்கான சான்றிதழ் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள நீலகிரி, மன்னார் வலைகுடா, சுந்தரவன காடுகள் உள்ளிட்டவை யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.