உலகின் சக்திகள்: ஏஞ்சலா 7வது முறையாக முதலிடம், சாந்தா கோச்சருக்கு 32வது இடம்
உலக அளவில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் 32வது இடம் பிடித்துள்ளார்.
வாஷிங்டன்: உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
உலக அளவில், அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில், சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
ஏஞ்சலா மெர்கல்
உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்த ஆண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார். தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார். 13 ஆண்டுகளாக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார்.
தெரஸா மே
அவரைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பில்கேட்ஸ் பவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 3-வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஷெரீல் சாண்ட்பெர்க் 4-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.
இவாங்கா ட்ரம்ப்
ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சாந்தா கோச்சர்
ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் 32வது இடத்தில் உள்ளார். எச்சிஎல் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் 57வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூமுதார் 71வது இடத்திலும் உள்ளனர்.
11வது இடத்தில் இந்திரா நூயி
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்தில் உள்ளார். அதேபோல் மற்றொரு அமெரிக்க வம்சாவளி பெண்ணான ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளார்.
பிரியங்கா சோப்ரா
இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 92-வது இடத்திலும், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.