நியூசிலாந்தில் பாதுகாக்கப்படும் “தமிழ் பொக்கிஷம்”.. பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீதின் வியப்பான பதிவு
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினத்தில் இருந்து வந்த கப்பல் மணி அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதாக பிரபல தமிழ் தொகுப்பாளர் அப்துல் ஹமீது தெரிவித்து உள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களால் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று பாட்டுக்கு பாட்டு. குறிப்பாக 90s கிட்ஸ்களுக்கு விருப்பமான இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அப்துல் ஹமீது.
எப்படி இந்த நிகழ்ச்சியை மறக்க முடியாதோ அதேபோன்று அப்துல் ஹமீதின் தோற்றத்தையும், அவரது அழகிய தமிழ் உச்சரிப்பையும் மக்களால் எளிதில் மறக்க முடியாது. அந்த அளவுக்கு புகழ்பெற்ற அந்த நிகழ்ச்சி.
நியூசிலாந்தில் அப்துல் ஹமீது
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு சென்ற தொகுப்பாளர் அப்துல் ஹமீது பேஸ்புக்கில் தமிழர்கள் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு வரலாற்று பதிவையும் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார். அதில், "தமிழ்நாட்டின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன தொடர்பு?
500 தமிழ் எழுத்து மணி
நியூசிலாந்து தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள். அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க, எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது, அதுவும் கையுறை அணிந்துகொண்டு.
நாகை கப்பல்
இந்த மணியின் வயது? 15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல், புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கியபோது, ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் நியுசிலாந்தின் ஆதிக்குடிகளான, 'மாஒரி' இனத்து மக்கள் கண்டெடுத்தனர்.
அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு
இது என்னவென்று தெரியால், உணவு தயாரிக்க, இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். நீண்ட காலத்திற்கு பின்னர் 1899 ஆம் ஆண்டு, இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.வில்லிய சொலென்சோ, இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கப்பல் மணி
இது என்னவென்று தெரியால், உணவு தயாரிக்க, இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். நீண்ட காலத்திற்கு பின்னர் 1899 ஆம் ஆண்டு, இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.வில்லிய சொலென்சோ, இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கப்பல் மணி
166 மில்லி மீட்டர் உயரமும், 155 மில்லி மீட்டர் சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ் மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டுவந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது.
முகைதீன் கப்பல்
இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில், பொறிக்கப்பட்டுள்ள வரி, 'முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி.' இஸ்லாமியராயினும் தம் தாய்மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப் புரிந்தது. வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்றபோது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது." என்று பதிவிட்டு உள்ளார்.