வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து.. ‘திடீரென வெடித்து’ 49 பேர் பலி.. 450க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
சிட்டகாங் : வங்கதேசத்தின் முக்கிய துறைமுக பகுதியான சிட்டகாங் அருகே கப்பல் கண்டெய்னர் டிப்போவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர். 450-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டிப்போவில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 43 பேர் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீக்காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கண்டெய்னர் டிப்போ
வங்க தேசத்தின் சிட்டகாங் அருகேயுள்ள சீதகுண்டா பகுதியில் உள்ள கண்டெய்னர் டிப்போவில் நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. ஆனால் இந்த கண்டெய்னர்கள் சிலவற்றில் வேதிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு 11.45 மணிக்கு வெடித்தது
இந்த தீ விபத்து குறித்து சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் போலீஸ் அவுட்போஸ்ட் காவல் ஆய்வாளர் நூருல் ஆலன் கூறுகையில், தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் சேமிப்பு கிடங்கில் இருந்த ரசாயனங்கள் காரணமாக விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து நேற்று இரவு 9 மணிக்கு ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது இரவு 11.45 மணிக்கு திடீரென வெடித்தது. அதன்பிறகு தீ மளமளவென பரவத் தொடங்கியது எனத் தெரிவித்துள்ளார்.

குலுங்கிய வீடுகள்
கண்டெய்னர் டிப்போவின் லோடிங் பாயிண்ட் பகுதியில் பெரும் சத்தத்தோடு கண்டெய்னர் வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் உள்ள குடியிருப்புகளும் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்ததாக கூறப்படுகிறது. தீப்பிடித்த பொருள் ஒன்று அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பறந்து வந்து தமது அருகில் விழுந்தது என கடைக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

49 பேர் பலி
இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. தற்போது வரை 49 இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ராணுவ மருத்துவமனைகளும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்து வருகின்றன.

5 தீயணைப்பு வீரர்கள்
இந்தத் தீ விபத்தில் 5 தீயணைப்பு வீரர்களும் உயிரிந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சிட்டகாங் தீயணைப்பு சேவை இயக்குநர் எம்.டி. ஃபரூக் ஹுசைன் சிக்தர் கூறுகையில், சுமார் 19 தீயணைப்பு பிரிவுகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆறு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

டிப்போ இயக்குநர்
கன்டெய்னர் டிப்போவின் இயக்குநர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கண்டெய்னரில் இருந்து தீ தொடங்கியது என்று கருதுகிறோம். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்கான முழு செலவையும் நாங்கள் ஏற்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நாங்கள் பொறுப்பேற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications