எம்.ஹெச்.370- யாரை பார்த்து அப்படி சொல்கிறது மலேசியன் ஏர்லைன்ஸ்?: எழுத்தாளர்கள் பாய்ச்சல்
வெலிங்டன்: மாயமான மலேசிய விமான துயரம் குறித்து புத்தகம் எழுதி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சி செய்வதாகக் கூறிய மலேசியன் ஏர்லைன்ஸுக்கு எழுத்தாளர்கள் இருவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 பற்றி முன்னாள் விமானியும், கிவி ஏர்லைன்ஸ் நிறுவனர்களில் ஒருவருமான இவான் வில்சன் மற்றும் ஜியாப் டெய்லரும் சேர்ந்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டனர்.
தி ட்ரூத் பிஹைண்ட் தி லாஸ் ஆப் பிளைட் 370 என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகம் கடந்த ஜூலை மாதம் வெளியானது.
தற்கொலை
மலேசிய விமானத்தின் கேப்டன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஜாஹரி அகமது ஷா தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாகியதாக அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் பார்க்க
நியூசிலாந்தைச் சேர்ந்த வில்சனும், டெய்லரும் விபத்து பற்றி புத்தகம் எழுதி பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் குற்றம் சாட்டியது.
ஆய்வு
நாங்கள் ஒன்றும் சும்மா புத்தகத்தை எழுதவில்லை. விமான விபத்து குறித்து நன்கு ஆய்வு செய்து தான் எழுதினோம். ஆய்வின் அடிப்படையில் தான் கேப்டன் தற்கொலை செய்தார் என்று தெரிவித்தோம் என வில்சன் கூறியுள்ளார்.
யாரை பார்த்து?
யாரை பார்த்து பணம் சம்பாதிக்க இப்படி எழுதியதாக கூறுகிறார்கள்? மலேசிய விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும் என்று தீர ஆய்வு செய்து தான் ஒரு முடிவுக்கு வந்தோம் என்று டெய்லர் தெரிவித்துள்ளார்.
விமானம்
மலேசிய விமானம் சுட்டுத் தள்ளப்படவோ, தீப்பிடித்திருக்கவோ, வேறு கோளாறோ ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. கேப்டன் தான் தற்கொலை செய்து கொள்ள விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார். இது துயரமானது என்றாலும் இப்படி தான் நடந்திருக்க வேண்டும் என்றார் டெய்லர்.