Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்.. சீனுக்குள் வரும் சீனா.. அப்பவே சொன்ன மோடி! பலுசிஸ்தானில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் மால்கம் எக்ஸின் பிரபலமான வார்த்தை, "சுதந்திரம் இல்லாமல் அமைதி இல்லை". இந்த வாக்கியம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்கு மிகவும் பொருந்தும். பலுசிஸ்தானில் பல ஆண்டுகளாக அமைதி இல்லை, ஏனென்றால் அங்கு வாழும் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் நாடு 1947-ல் உருவானதில் இருந்து பலுசிஸ்தான் மக்கள் சுதந்திரம் கேட்கும் போதெல்லாம், பாகிஸ்தான் அரசு அதனை அடக்கி ஒடுக்கி வருகிறது.

பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டை மீறி கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது, பாகிஸ்தான் அரசு சீனாவிடம் உதவி கேட்டது. சீனா முதலீடு என்ற பெயரில் பலுசிஸ்தானில் நுழைந்து, அந்த பகுதியின் வளங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தது. சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்ற திட்டத்தின் மூலம் பலுசிஸ்தானில் உள்ள கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன.

pakistan Balochistan china narendra modi

இந்த CPEC திட்டம் பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், ராணுவ ஜெனரல்களும் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும், இந்த திட்டத்தின் மூலம் சீனா, பாகிஸ்தானுக்குள் நேரடியாக நுழையவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்பது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி. இது சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகத்தையும் இணைக்கிறது.

பலுசிஸ்தானில் சீனாவின் நோக்கம் என்ன?

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த திட்டத்தை பொருளாதார திட்டம் என்று கூறினாலும், உண்மையில் இது பொருளாதார வளர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொண்ட திட்டம் கிடையாது. இதற்கு பின்னால் அரசியல் மற்றும் ராணுவ நோக்கங்களும் உள்ளன. 2011-ம் ஆண்டு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) மஜீத் பிரிகேட் என்ற அமைப்பை உருவாக்கி பாகிஸ்தானுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு குவாடர் துறைமுகத்தில் முதலீடு செய்ய சீனாவுக்கு அழைப்பு விடுத்தது. 2015-ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தானுக்கு வந்தபோது, இந்த சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சீனா சுமார் 60 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தான் போன்ற ஒரு ஏழை நாடு வெறும் 1 அல்லது 2 பில்லியன் டாலர்கள் கடன் வாங்குவதற்கு உலக வங்கியிடம் பலமுறை கெஞ்ச வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது 60 பில்லியன் டாலர்கள் என்பது பாகிஸ்தானுக்கு மிக பெரிய தொகை.

தற்போது குவாடர் துறைமுகம் செயல்படத் தொடங்கியுள்ளது. கப்பல்கள் வந்து போக ஆரம்பித்துவிட்டன. பலுசிஸ்தான் கனிம வளங்கள் நிறைந்த பகுதி என்பதால், அங்கு நடக்கும் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் சீனாவின் நலனையும் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

pakistan Balochistan china narendra modi

எதிர்த்து போராடும் பலுச் கிளர்ச்சியாளர்கள்

பலுச் தேசியவாதிகள் CPEC திட்டத்தையும், பலுசிஸ்தானில் இருக்கும் மற்ற வெளிநாட்டு சக்திகளையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். பலுச் கிளர்ச்சியாளர்கள் CPEC திட்டத்தை பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தானை "காலனித்துவ சுரண்டல்" செய்வதற்கான ஒரு அடையாளம் என்று கருதுகிறார்கள். இந்த திட்டம் பலுசிஸ்தானின் இயற்கை வளங்களையும், நிலத்தையும் சுரண்டுகிறது என்றும், ஆனால் இதனால் பலுசிஸ்தான் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக குவாடர் துறைமுகம் மற்றும் சுரங்கத் திட்டங்கள் மூலம் பலுசிஸ்தானின் இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பலுச் கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வளங்களில் இருந்து கிடைக்கும் பணம் பாகிஸ்தான் அரசுக்கும், சீனாவுக்கும் தான் போகிறது என்றும், பலுசிஸ்தான் மக்களுக்கு அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் கூட கிடைப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். CPEC திட்டத்தால் பலுசிஸ்தானில் வெளிநாட்டினர் அதிகமாக குடியேறுவதால், பலுச் மக்களின் கலாச்சார அடையாளமும், மக்கள்தொகை அமைப்பும் பாதிக்கப்படுவதாக பலுச்சி கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக பலுச்சி அமைப்புகள் பாகிஸ்தானில் இருக்கும் சீன நிறுவனங்கள் மற்றும் சீன பொறியாளர்கள் மீது பலமுறை தற்கொலை தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினரும் அவர்களின் இலக்குகளில் உள்ளனர்.

முக்கியமான சில தாக்குதல்கள்

  • 2018-ல் கராச்சியில் இருந்த சீன தூதரகம் மீது தாக்குதல்.
  • 2019-ல் குவாடர் பேர்ல் கான்டினென்டல் ஹோட்டல் மீது தாக்குதல்.
  • 2022-ல் கராச்சி பல்கலைக்கழகத்தில் இருந்த கன்பூசியஸ் நிறுவனம் மீது தற்கொலை தாக்குதல்.
  • 2023 ஆகஸ்ட்-ல் குவாடரில் சீன பொறியாளர்கள் மீது தாக்குதல்.
  • 2024 மார்ச்-ல் தாசுவில் சீன பொறியாளர்கள் சென்ற வாகன அணி மீது தற்கொலை தாக்குதல்.

இந்த தாக்குதல்களில் நிறைய சீன குடிமக்களும் உயிரிழந்தனர். சமீபத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) ஜஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தியபோது, BLA அமைப்பின் கமாண்டர் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், அந்த கமாண்டர் சீனாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வீடியோவில் கமாண்டர் பேசியதாவது: "இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நாங்கள் சொல்லும் செய்தி. நீங்கள் உடனடியாக பலுசிஸ்தானை விட்டு வெளியேறுங்கள். எங்கள் தலைவர் ஜெனரல் அஸ்லாம் பலோச் ஏற்கனவே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை."

மேலும் அந்த கமாண்டர் கூறுகையில், "சீனா, நீங்கள் எங்கள் அனுமதி இல்லாமல் இங்கு வந்து எங்கள் எதிரிகளுக்கு உதவி செய்கிறீர்கள்... ஆனால் இப்போது எங்கள் நேரம். CPEC திட்டம் கண்டிப்பாக தோல்வியடையும் என்று BLA உங்களுக்கு உறுதியளிக்கிறது. மஜீத் பிரிகேடில் தங்களை காப்பாற்றிக்கொள்ள உயிரையும் கொடுக்க தயாராக வீரர்கள் இருக்கிறார்கள்.

மஜீத் பிரிகேட் அமைப்பில் சீன அதிகாரிகள் மற்றும் சீன நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜி ஜின்பிங், உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. பலுசிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்." என்று எச்சரித்துள்ளார்.

pakistan Balochistan china narendra modi

தலையிட தயாராகும் சீனா

குவாடர் துறைமுகத்தில் சீனாவுக்கு தற்போது ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. ஏனென்றால், சீனா பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த ரயில் கடத்தல் சம்பவத்திற்கு பிறகு, குவாடர் துறைமுகத்தில் தனது கட்டுப்பாட்டை இன்னும் அதிகப்படுத்த சீனா முயற்சி செய்கிறது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது.

பலுசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடந்த தாக்குதலை சீனா கண்டித்துள்ளது. மேலும், "பாகிஸ்தானுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் சீனா தயாராக இருக்கிறது" என்று கூறியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "நாங்கள் இந்த தாக்குதல் குறித்த செய்திகளை பார்த்தோம். இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கும், ஒற்றுமையையும், சமூக அமைதியையும் பாதுகாப்பதற்கும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான் பிரச்சனையில் ஆப்கானிஸ்தானின் பங்கு

பலுசிஸ்தான் பிரச்சனையில் ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது. பலுசிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகளை ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிக்க முடியாது. பலுசிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே 900 கிலோமீட்டருக்கும் அதிகமான எல்லை உள்ளது. இந்த எல்லை பலுச் மற்றும் பஷ்தூன் பழங்குடியினரை இணைக்கிறது.

பலுசிஸ்தானின் வடக்கு பகுதிகளில் ஆப்கானிஸ்தானின் பஷ்தூன் இன மக்களுடன் கலாச்சார மற்றும் குடும்ப ரீதியாக தொடர்புடைய பஷ்தூன் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்த பகுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் செல்வதற்கு முக்கியமான பாதையாக இருந்து வருகிறது.

பலுச் மற்றும் பஷ்தூன் சமூகங்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல வருடங்களாக அதிருப்தியில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்த இரண்டு சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.

பலுசிஸ்தானின் வடக்கு பகுதிகளிலும், கைபர் பக்துன்க்வா மாகாணத்திலும் பஷ்தூன் மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பஷ்தூன் மக்கள் அமைப்பான PTM இராணுவ அடக்குமுறை, மக்களை காணாமல் போக செய்வது மற்றும் பொதுமக்கள் மீது கொடுமை செய்வது போன்ற செயல்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த இயக்கம் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினாலும், பஷ்தூன் இளைஞர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

pakistan Balochistan china narendra modi

பாகிஸ்தான் எதிர்பார்க்கும் ஆபத்து

பலுச் மற்றும் பஷ்தூன் சமூகங்கள் ஒன்று சேர்ந்தால் பாகிஸ்தான் அரசுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்த இரண்டு சமூகங்களும் கூட்டணி அமைத்தால், பாகிஸ்தானில் கிளர்ச்சி அதிகமாகும்.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) மற்றும் பலுசிஸ்தான் குடியரசுக் கட்சி (BRA) போன்ற பலுச் கிளர்ச்சிக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் பயிற்சி முகாம்களை அமைத்து இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன. இந்த பயிற்சி முகாம்களில் இருந்துதான் தாக்குதல்களை திட்டமிட்டு பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் ஆயுதங்களை கடத்துகிறார்கள் என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

ஜஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறுகையில், "தாக்குதல் நடத்தியவர்கள் ஆபரேஷன் முழுவதும் ஆப்கானிஸ்தானில் இருந்த தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் மூளையாக செயல்பட்டவர்களுடன் செயற்கைக்கோள் போன் மூலம் தொடர்பில் இருந்தனர்" என்று தெரிவித்தார்.

மேலும், "உளவுத்துறை அறிக்கைகள் மூலம் இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத குழுக்களால் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் முழுவதும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர்" என்று ISPR கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு இந்த பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

pakistan Balochistan china narendra modi

மோடி பேச்சை கவனித்தீர்களா?

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பலவீனமாக இருப்பது, பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகளின் நலன்கள், பலுச் கிளர்ச்சியாளர்களின் உறுதி போன்ற காரணங்களால் பலுசிஸ்தான் பிரச்சனை மேலும் சிக்கலாகி வருகிறது.

பலுச் நிலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் ஒன்று சேர்ந்துள்ளதால், இந்த பிரச்சனையை தீர்ப்பது பாகிஸ்தானுக்கு மட்டும் சாத்தியமில்லாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. பலுச் பிரிவினைவாதிகள் பலுசிஸ்தான் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, 2016-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் பற்றி பேசியது சர்வதேச அளவில் இந்த பிரச்சனைக்கு கவனத்தை ஈர்த்தது.

சீனாவின் அதிகப்படியான முதலீடு, பாதுகாப்பு குறைபாடு, பஷ்தூன் மக்களின் அதிருப்தி மற்றும் பலுச்-பஷ்தூன் கூட்டணி போன்ற காரணங்களால் பாகிஸ்தான் அரசால் இந்த பிரச்சனையை தனியாக சமாளிக்க முடியாது.

ஒருவேளை பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தான் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாரானால், ஆப்கானிஸ்தான், சீனா, பஷ்தூன் மற்றும் பலுச் கிளர்ச்சியாளர்கள் என அனைவரின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+