காஸா விவகாரம்... இங்கிலாந்தின் கொள்கையை கண்டித்து பெண் அமைச்சர் வர்சி ராஜினாமா!
லண்டன்: காஸா விவகாரத்தில் இங்கிலாந்து அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்காததைக் கண்டித்து அந்நாட்டு பெண் அமைச்சர் ஷெய்தா வர்சி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பிஞ்சு குழந்தைகள், பொதுமக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டனர்.
சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்வைத் தொலைத்து நிற்கின்றனர். தற்போது அங்கு 72 மணி நேர யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேல் தமது படைகளை காஸாவில் இருந்து விலக்கிக் கொண்டும் இருக்கிறது. இந்த நிலையில் காஸா விவகாரத்தில் தெளிவற்ற நிலைப்பாட்டை இங்கிலாந்து மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஷெய்தா வர்சி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷெய்தா வர்சி இங்கிலாந்து நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக உள்ளார். இங்கிலாந்து அமைச்சரவையில் இடம் பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் அமைச்சர் ஷெய்தா வர்சி ஆவார்.
தமது ராஜினாமா குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வர்சி, ஆழ்ந்த வருத்தத்துடன் இங்கிலாந்து பிரதமருக்கு எனது ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தேன். என்னால் காஸா விவகாரத்தில் அரசின் கொள்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க முடியாது. என்று தெரிவித்துள்ளளேன் என தெரிவித்துள்ளார்.