Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 வருஷம் பிறகு பெத்தலகேம் ஒளிர்கிறது.. கனவு நிஜமானது.. இயேசு பிறந்த மண்ணில் மகிழ்ச்சி தந்த மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இரண்டு ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பாலஸ்தீனத்தில் உள்ள பெத்தலகேம் ஒளிர்கிறது. அண்மையில் அறிவிக்கபட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தப் புனித நகரம் இறுதியாகக் கிறிஸ்துமஸ் பண்டிகையை மீண்டும் கொண்டாட முடிவு செய்திருக்கிறது. இதன் அடையாளமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க நேட்டிவிட்டி சர்ச் (பிறப்புத் தேவாலயம்) முன், பாரம்பரிய பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, காசா போர் காரணமாக இயேசு பிறந்த இடமாகக் கருதப்படும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள பெத்லகேம் நகரில் அனைத்து பொது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் இப்போது போர் நிறுத்தம் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளது. அங்கு கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டிருக்கிறது.

Bethlehem lights up after 2 years Christmas tree lights up in the land where Jesus was born
Photo Credit:

பெத்லகேம் நகர மேயர் மாஹர் கனாவதி பேட்டி

இதுபற்றி பெத்லகேம் நகர மேயர் மாஹர் கனாவதி கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியான சூழல் இல்லை.. இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் இல்லாமல் போய்விட்டது. இங்கு எங்களுக்கு நிலைமை மோசமாக இருந்தது. வேலை இல்லை, வருமானம் இல்லை. நாங்கள் அனைவரும் சுற்றுலாவை நம்பித்தான் வாழ்கிறோம். ஆனால், சுற்றுலா வருமானம் ஜீரோவிற்கு கீழே சென்றுவிட்டது.

எங்கள் நம்பிக்கையின் ஒளி

காசாவில் உள்ள கிறிஸ்தவச் சமூகம் உட்படப் பலரும் இன்னும் அவதிப்படும் இந்த சூழலில், இந்த கொண்டாட்டங்களைத் தொடங்கும் இந்த முடிவு சர்ச்சைக்குரியது தான் என்பதை ஏற்கிறேன். இதனை சிலர் இந்த சூழலில் பொருத்தமற்றது என்று நினைக்கலாம். ஆனால் என் மனசில், இதை இப்போது செய்வது சரி என்று தோன்றியது. ஏனென்றால், கிறிஸ்துமஸை ஒருபோதும் நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ கூடாது. இது எங்களுக்கு நம்பிக்கையின் ஒளி" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கிறிஸ்துமஸ் மரத்தில் செல்ஃபி

பெத்லகேம் நகரில் உள்ள மேஞ்சர் சதுக்கத்தில் சிகப்பு மற்றும் தங்க நிற அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் முன், உள்ளூர் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் 'செல்ஃபி' எடுத்து செல்வதை காணமுடிகிறது. அவர்களுடன் சில வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இணைந்து செல்ஃபி எடுத்து செல்கிறார்கள். பெத்லகேம் நகரின் வீதிகளில் இப்போது வண்ணமயமான விளக்குகள் ஒளிர்கின்றன. கிறிஸ்துமஸ் கடைவீதிகள் மற்றும் குழந்தைகள் கொண்டாட்டங்களுக்கான அறிவிப்புப் பலகைகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொலிவுடன் காண முடிகிறது.


தொழில் அதிபர் மகிழ்ச்சி

பெத்லகேம் நகரின் நகைத் தொழிலதிபரான நாடியா ஹஸ்பௌன் இந்த காட்சிகளைகண்டு நெகிழ்ந்தபடி கூறுகையில், "நீண்ட நாள் கழித்து கிறிஸ்துமஸ் மரத்தைக் காண்பது, பெத்லஹேமில் வெளிநாட்டவர்களை மீண்டும் பார்ப்பது, மற்றும் கிறிஸ்துமஸை அதன் உண்மையான உணர்வுடன் கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குதான் அனைத்தும் தொடங்கியது. எனவே, கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்ற செய்தியை உலகிற்கு நாங்கள்தான் அனுப்ப முடியும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அமைதியாக இருந்தால், அது முழு உலகிற்கும் ஒரு நல்ல செய்தியைத் தரும் என்று நம்புகிறேன்," என்றார்.

மீண்டு வரும் சுற்றுலாப் பயணிகள்

பெத்லகேம் நகரின் அருகில் உள்ள பெய்ட் ஜாலா மற்றும் பெய்ட் சஹோர் போன்ற சிறிய நகரங்களும் கிறிஸ்துமஸ் மரங்களை ஏற்றத் திட்டமிட்டிருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காலியாக இருந்த ஹோட்டல்களில், இப்போது இஸ்ரேலின் பாலஸ்தீனக் குடிமக்கள் மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகள் மூலம் முன்பதிவுகள் குவிந்திருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஏஞ்சலிகா என்ற ஒரு சுற்றுலாப் பயணி பெத்லகேம் நகருக்கு வந்துள்ளார். அவர் கூறுகையில் "அனைவருமே தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன். அதிக சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் இருப்பது வருத்தம் அளித்தாலும், வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஒரு நல்ல விஷயம்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஏமாற்றம்

சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறுகையில், பாலஸ்தீனம் குறித்த தொடர்ச்சியான செய்திகள் நிலைமை இன்னும் ஆபத்தானது என்று கூறுவது கவலை அளிக்கிறது. இது ஒரு சுற்றுலா நகரம்; சுற்றுலா இல்லாமல் வாழ்க்கை இல்லை. நாங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை ஏற்றியதில் தொடங்கி, மீண்டும் முன்பு போல ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் பிற பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்று நம்புகிறோம் என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

வேலைக்கு போக முடியவில்லை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெத்லஹேமில் வேலையில்லாத நிலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் 2023 இல் காசா போரைத் தூண்டிய ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, மேற்குக் கரையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் வேலைக்குச் செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது.

தடுத்து நிறுத்திய இஸ்ரேல்

இதனிடையே ஐ.நா.வின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தகவலின் படி, பாலஸ்தீனம் நம்பியிருக்கும் வரி வருவாயை இஸ்ரேல் சுமார் $1.76 பில்லியன் அளவிற்குத் தடுத்து நிறுத்தியுள்ளதாம். இதனா மேற்குக் கரையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆளும் பாலஸ்தீன அதிகார சபையால், பொது ஊழியர்களுக்கு பகுதி சம்பளத்தை மட்டுமே வழங்க முடிந்திருக்கிறதாம். இப்படியான மோசமான பொருளாதார நிலைமை காரணமாக, பெத்லஹேமில் உள்ள பல பாலஸ்தீனக் கிறிஸ்தவர்களுக்குஇந்த முறை கிறிஸ்துமஸ் சிக்கனமானதாகவே இருக்கும் என்கிறார்கள்.

உணவக உரிமையாளர் கவலை

பல ஆண்டுகளாக பெத்லஹேமில் செயல்பட்டு வரும் 'அஃப்டீம்' என்ற குடும்ப உணவகத்தின் உரிமையாளர் அலா சலாமே இந்த கிறிஸ்துமஸ் குறித்து கூறுகையில், "பல பாலஸ்தீனர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இது கடினமான காலம். இந்தச் சவால்களுக்குப் பிறகு நாங்கள் கிறிஸ்துமஸுக்குத் தயாராகிறோம். எங்கள் ஊரில் பல குடும்பங்களால் ஃபலாஃபெல் ( அங்கு பிரபலமான மற்றும் மலிவான உணவு) கூட வாங்க முடியவில்லை.

இந்த முறை கிறிஸ்தவர்கள் கொண்டாட்டங்களை நடத்த முயற்சிப்பார்கள், ஆனால் அவர்களுடைய பொருளாதார நிலைக்கு ஏற்பவே அது இருக்கும். திருவிழாவிற்கு தங்கள் குழந்தைகளைக் கூட்டிச் செல்ல நினைப்பவர்களிடம், அந்தக் கொண்டாட்டங்களுக்காகச் செலவு செய்யப் பணம் இல்லை என்றார்.

மகிழ்ச்சி தந்த மாற்றம்

நேட்டிவிட்டி சர்ச்சின் குகை போன்ற அடிப்பகுதியில், ஒரு உள்ளூர் பெண், ஒரு இந்தியச் சுற்றுலாப் பயணிகள் குழுவைப் பின் தொடர்ந்து, இயேசு பிறந்த இடத்தைக் குறிக்கும் வெள்ளி நட்சத்திரத்தின் அருகே குனிந்து மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு சென்று கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமல்ல அங்குள்ள பலருக்கும் ஏக்கம் என்னவென்றால் சுற்றுலா பயணிகள் மீண்டும் வரவேண்டும் என்பது தான். என்னதான் பாலஸ்தீனம் முழுவதும் பதற்றம் நீடித்தாலும், பெத்லகேம் மக்கள் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறந்த மண்ணில் ஒளிர்ந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+