கருப்பு சூட்கேஸ்.. சிவப்பு பட்டன் தெரியுமா? ரஷ்யா தந்த பரபர வார்னிங்.. ஹை அலர்ட்டில் உக்ரைன்!
மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா சிறிய அளவிலான அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
உக்ரைன் போர் தொடங்கிய முதல் வாரமே ரஷ்யா அணு ஆயுத ஏவுகணைகளை பயிற்சி எடுத்தது. அதோடு தங்களின் அணு ஆயுத படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் புடின் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த போரில் ஒரு பக்கம் பாரம்பரியமான போர் முறையில் உக்ரைன் நகரத்தை சுற்றி வளைத்து கடுமையான தாக்குதல்களை ரஷ்ய படைகள் நடத்தி வருகின்றன.
இன்னொரு பக்கம் நவீன ஏவுகணைகள், ஹைப்போர் சோனிக் ஏவுகணைகள், வேக்கம் குண்டுகள் என்று புதிய ரக குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் ரஷ்யா இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஏற்கனவே சொன்னார்
ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இது தொடர்பாக ஏற்கனவே கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அவர் அளித்துள்ள பதிலில், எங்கள் நாட்டிற்கு என்று ஒரு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், எங்களின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம். எங்களின் கொள்கைப்படி அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம், என்று அவர் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

தாக்குவோம்
அங்கு இருக்கும் மக்களை தாக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை, என்று குறிப்பிட்டார். எங்கள் நாட்டில் அணு ஆயுத ஏவுகணைகள் பயிற்சி நடத்தப்பட்டது உங்களுக்கு தெரியும். அதிபரின் உத்தரவு இன்றி இது போன்ற பயிற்சிகளை நடத்த முடியாது என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறோம். கருப்பு சூட் கேஸ், சிவப்பு பட்டன் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் (அணு ஆயுதத்தை இயக்குவதற்கான சூட் கேஸ்). , எங்கள் நாட்டிற்கு என்று ஒரு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், எங்களின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம், என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

எங்கே தங்குவார்
இந்த நிலையில்தான் அணு ஆயுத போர் ஏற்பட்டால் புடின் எப்படி? எங்கே? அணு ஆயுதங்களை வைத்து தாங்குவார் என்று யூரோ நியூஸ் என்ற ஐரோப்பிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பொதுவாக புடின் மக்கள் அதிகம் வெளியேற்றப்பட்ட நகரங்களில் தாக்க வாய்ப்பு உள்ளது. மரியூபோல் போன்ற நகரங்களில் அவர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அதிக ரிஸ்க் இல்லாத குறைந்த பலம் கொண்ட அணு ஆயுதங்களை அவர் பயன்படுத்தவே அதிகம் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா பலம்
உலகிலேயே அதிக அணு ஆயுதம் கொண்ட நாடு ரஷ்யாதான். ரஷ்யாவிடம் 6,257 அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவிடம் 5,550 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் இவை எல்லாம் வெளியே சொல்லப்பட்ட கணக்குகள்தான். வெளியே சொல்லாமல் இதைவிட அதிக அணு ஆயுதங்கள் இருக்கலாம். அதோடு இதில் பல அணு ஆயுதங்கள் மிக மிக பெரியவை. சில அணு ஆயுதங்கள் குறைவான சேதத்தை ஏற்படுத்த கூடிய சிறிய ரக அணு ஆயுதங்கள் ஆகும்.

அதீத பலம்
ரஷ்யாவிடம் இருக்கும் strategic அணு ஆயுதங்கள் என்பவை ஒரு நாட்டில் பல நகரங்களை ஒரே நேரத்தில் சிதைக்கும் திறன் கொண்டது. இவைகளை ஏவுகணைகள், போர் கப்பல்கள் மூலம் ஏவ முடியும். ஆனால் இதை ரஷ்யா பயன்படுத்தாது. ஏனென்றால் ரஷ்யாவின் தரப்பிற்கும் இது சேதங்களை ஏற்படுத்தும் என்பதால் ரஷ்யா இப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தாது. மாறாக ரஷ்யா tactical வகை அணு ஆயுதங்களை பயன்படுத்தும்.

சிறிய குண்டுகள்
இந்த tactical வகை அணு ஆயுதங்கள் என்பவை சிறிய வகையானது. ரஷ்யாவிடம் கிட்டத்தட்ட 2000 tactical அணு ஆயுதங்கள் உள்ளன. இவை சிறிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும். குறி வைக்கும் நகரங்களை மட்டும் சிறிய அளவில் கடுமையாக தாக்க இந்த அணு ஆயுதங்கள் உதவும். உக்ரைனை போரில் அடி பணிய வைக்க, உக்ரைனை மொத்தமாக வீழ்த்த ரஷ்யா இந்த அணு ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது என்று யூரோ நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாற்றலாம்
500 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் சிறிய ரக ஏவுகணைகளில் இந்த tactical அணு ஆயுதங்களை வைத்து அனுப்பி முடியும். அதோடு அவர்களிடம் dial-a-yield அணு ஆயுதங்கள் உள்ளன. அதாவது எவ்வளவு கிலோ அணுவை பயன்படுத்த வேண்டும், எவ்வளவு ஆற்றலை வெளியிட வேண்டும் என்று இதில் முன்கூட்டியே செட் செய்ய முடியும். 0.3, 1.5, 10, அல்லது 50 kilotons அணு அளவை dial-a-yield ஆயுதம் மூலம் முன்பே செட் செய்ய முடியும். இது போன்ற அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளனவாம்.

கண்டுபிடிக்கலாம்
ஆனால் ரஷ்யா இப்போது வரை அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக இருந்தால் ரஷ்யா இந்நேரம் தங்கள் படைகளை வெளியேற்றி இருக்கும். அதோடு அவர்களின் அணு ஆயுதங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதை மற்ற நாட்டு செயற்கைகோள்கள் கண்டுபிடித்து இருக்கும். அல்லது உளவு அமைப்புகள் மூலம் இந்த தகவல் கசியவிடப்பட்டு இருக்கும். ஆனால் அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் உக்ரைன் தீவிர கண்காணிப்பை செய்து வருகிறது.

செலன்ஸ்கி எச்சரிக்கை
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்து மிரட்டி வருகிறது. இது உக்ரைனுக்கு மட்டும் ஆபத்து அல்ல. மொத்த உலகிற்கும் ஆபத்து. ரஷ்யா உட்பட உலக நாடுகள் கொடுத்த உத்திரவாதத்தால் நாங்கள் அணு ஆயுதங்களை கைவிட்டோம். ஆனால் இப்போது அதே ரஷ்யா எங்கள் மீது அணு ஆயுத அச்சுறுத்தலை தருகிறது. உலகிற்கே இது ஆபத்தாக முடியும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications