கைதிகளை ரிலீஸ் செய்தால் மாணவிகளை திருப்பி அனுப்ப சம்மதம்... போகோ ஹரம் அறிவிப்பு
அபுஜா: சிறையில் உள்ள தங்களது இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் கடத்தி வைத்துள்ள சிறுமிகளை விட்டு விடுவதாக நைஜீரிய தீவிரவாத அமைப்பான போகோ ஹரம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தின் பள்ளியில் இருந்து 200 சிறுமிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் போகோ ஹரம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷேகாவ் வெளியிட்ட வீடியோவில், 'நான்தான் சிறுமிகளை கடத்தி இருக்கிறேன். அவர்களை மார்க்கெட்டில் செக்ஸ் அடிமைகளாக விற்பேன்'என மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.
கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் பணியில் நைஜீரிய அரசுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளன. இதற்கிடையே கடத்தப் பட்ட சிறுமிகளில் சிலர், தங்களது சாமர்த்தியத்தால் அங்கிருந்து தப்பி வந்தனர். நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநில கவர்னரும் கூட கடத்தப்பட்ட சிறுமிகள் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அபுபக்கர் ஷேகாவ் 17 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு புதிய வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதில், சிறையில் உள்ள தங்களது இயக்கத்தை உள்ளவர்களை விடுதலை செய்தால், கடத்தப்பட்டுள்ள இருநூறு மாணவிகளை தானும் விடுதலை செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள சிறுமிகள் இருக்கும் இடம் பற்றியும், தீவிரவாதிகள் பற்றியும் தகவல் அளித்தால் 3 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படும் எனநைஜீரிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போகோ ஹரம் வெளியிட்டுள்ள இந்த புதிய வீடியோவில் சுமார் 100க்கும் அதிகமான மாணவிகள் தலைத்துண்டும், மேலங்கியும் அணிந்து காட்சி தருகின்றனர். இது தொடர்பாக அபுபக்கர் கூறுகையில், ‘கடத்தப்பட்ட அம்மாணவிகள் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications