காத்மாண்டு வாக்குச் சாவடியில் குண்டு வெடித்தது: 3 பேர் காயம்
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனேக இடங்களில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் வேளையில், காத்மாண்டு வாக்குச் சாவடி அருகே குண்டுவெடித்ததில் 3 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மன்னர் ஆட்சி முடிவுக்குப் பின்னர், நேபாளத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜனநாயக ஆட்சி அமைக்கப் பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளால் ஆட்சி நடைபெற்றது.
புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் உண்டான தோல்வியால் நேபாளத்தில் நாடாளுமன்றத்தை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்த முடிவு செய்யப் பட்டது.
அதன்படி, 601 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு 240 பேரை வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் விகிதாசார அடிப்படையில் 335 பேரும், 26 பேர் நியமன உறுப்பினர்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தம் 33 கட்சிகளின் சார்பில், 16 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 1 கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்க ஏதுவாக 18 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்குத் துவங்கிய ஓட்டுப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், காத்மாண்ட் வாக்குச் சாவடி அருகே குண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர். 8 வயது சிறுவன் ஒருவன் பொம்மை என விளையாட்டாக தூக்கி வந்த வெடிகுண்டு வெடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது நிச்சயமாக தேர்தலைக் குலைக்க சதி என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற வாக்குச் சாவடியைத் தவிர மற்ற இடங்களில் மக்கள் அமைதியாக வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.