பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள்.. பிரிக்ஸ் மாநாடு முதல் முறையாக கண்டனம்!
பிரிக்ஸ் மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு பிரகடனத்தில் பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத அமைப்புகளை வரிசைப்படுத்திய பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள்.
பெய்ஜிங்: பிரிக்ஸ் மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு பிரகடனத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத அமைப்புகளின் பெயர் இடம்பெற்றிருந்தது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ஒன்றிணைந்து 'பிரிக்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் தொடங்கியது.
இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து பேசினார். இந்நிலையில் இந்த மாநாட்டில் மேற்கண்ட 5 நாடுகளின் பிரதிநிதிகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக பிரகடனத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அந்த பிரகடனத்தில் 5 நாடுகளும் குறிப்பிடுகையில், பயங்கரவாதிகளால் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கவலை அளிக்கிறது.
தாலிபான், அல்கொய்தா, உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய அமைப்பு, ஹக்கானி அமைப்பு, லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்ஷ்-ஏ- முகமது, துருக்கியின் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் வன்முறை ஏற்படுகிறது.
பிரிக்ஸ் நாடுகள் உள்பட நாட்டின் எந்த மூலையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தாலும் அது வேதனை அளிக்கிறது. பயங்கரவாதம் எந்த வகையிலும் ஏற்படுவதை நியாயப்படுத்த முடியாது. இதை கண்டிக்கிறோம். பயங்கரவாதத்தை செய்வது, பயங்கரவாதத்தை ஆதரிப்பது, நிதி அளிப்பது உள்ளிட்டவற்றை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறோம் என்ற அந்த பிரகடனத்தில் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத அமைப்புகளின் பெயரை பட்டியலிடுவது இதுவே முதல் முறை என்பதால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கூடுகிறது என்றே தெரிகிறது. பாகிஸ்தான், சீனாவின் நட்பு நாடாக இருக்கும் போதிலும் அந்நாட்டிற்கு எதிராக கடுமையான கருத்துகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.