என்னாச்சு.. மனைவிக்கு கொரோனா.. திடீரென மரணமடைந்த புருண்டி அதிபர்.. பரபரப்பில் ஆப்பிரிக்கா!
புருண்டி அதிபர் திடீரென மரணமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புஜும்பரா: புருண்டி நாட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 55 வயசான அந்த நாட்டு அதிபர் திடீரென மரணமடைந்து விட்டார். அவருக்கு மாரடைப்பு என அரசு கூறியுள்ளது. ஆனால் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அதிபரும் கொரோனாவால் இறந்திருப்பாரா என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உலகம் முழுவதையும் புரட்டி எடுத்து வரும் கொரோனாவுக்கு ஏழை பாழை, அதிபர், சாமானியர் என்று விதி விலக்கே இல்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனாவிடம் சிக்கி மீண்டு வந்தார். நம்ம நாட்டிலும் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்திலோ ஒரு எம்எல்ஏ மரணத்தையே அடைந்து விட்டார்.
இந்த நிலையில்தான் புருண்டியில் அந்த நாட்டு அதிபரான பியரி குருன்சிஸா என்பவர் திடீரென மரணமடைந்தார். நல்லாதான் இருந்தார். ஆனால் திடீரென அவர் மரணமடைந்து விட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் மரணம் அடைந்ததாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
என்ன கொடுமைன்னா சில நாட்களுக்கு முன்புதான் அதிபரின் மனைவி டெனிஸுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கென்யாவுக்கு விமானத்தில் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் இங்கு அதிபர் இறந்து விட்டார். எனவே அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
இனியும் "கம்யூனிட்டி பரவல்" இல்லைன்னு சொன்னா அது அபத்தம்.. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
2005ம் ஆண்டு முதல் முறை அதிபரானவர் பியரி. புருண்டி நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்திற்குப் பின்னர் அவர் அதிபராகப் பதவியேற்றார். 3வது முறையாக அவர் 2015ம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றபோது மக்கள் போராட்டம் வெடித்தது. பல ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்.
அதிபரின் இந்த திடீர் மரணத்தால் புருண்டியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த அதிபர் யார் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிபரின் மனைவி டெனிஸ் நிலை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.