"சாப்பாட்டுக்கே வழியில்லை.." ட்ரூடோ ஆட்சியில் கனடா நாட்டில் நிலைமை ரொம்பவே மோசம்! வெளியான ரிப்போர்ட்
ஒட்டாவா: இந்தியா கனடா இடையேயான உறவு கடந்த சில காலமாகவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். இது ஒரு பக்கம் இருக்கக் கனடா நாட்டில் இப்போது எந்தளவுக்கு மிக மோசமான சூழல் நிலவுகிறது என்பது குறித்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அங்குக் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காகப் பெற்றோர் உணவு சாப்பிடாமல் இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதாக ஷாக் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
கனடா நாட்டின் பிரதமராக இப்போது ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு முதலே இவர் தான் கனடா நாட்டு அதிபராக இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக இவர்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
கனடா: இதற்கிடையே இவரது ஆட்சியில் கனடா இப்போது வரலாற்றில் இல்லாத மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள பெற்றோர்களில் சுமார் 25% பேர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவைக் குறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது பெற்றோர் சாப்பிடாமல் இருந்தால் தான் குழந்தைகளுக்கு போதிய அளவு உணவு தர முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்: கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பு குறைந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளதால் கனடா மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. இதன் காரணமாகவே கனடாவில் நான்கில் சுமார் ஒரு பங்கு பெற்றோர் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவை குறைத்துள்ளனர்.
கடந்த நவம்பர் 21ம் தேதி சால்வேஷன் ஆர்மியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 90% மக்கள் பிற தேவைகளைச் சமாளிக்க மளிகைப் பொருட்களுக்கான செலவைக் குறைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கனடா சால்வேஷன் ஆர்மியின் செய்தித் தொடர்பாளர் ஜான் முர்ரே கூறுகையில், "உண்மை என்னவென்றால் இங்கு நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. கனடா நாட்டில் பலர் தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூட சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாகக் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூட சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கனடா மிக மோசமான ஆபத்தில் இருப்பதையே இது காட்டுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உணவுக்கே சிக்கல்: அங்கு சத்து குறைவான உணவுகளின் விலை குறைவாக இருப்பதால் வேறு வழியின்றி பலர் அதை வாங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பண பிரச்சினை காரணமாக சுமார் 84% பேர் உணவைச் சாப்பிடாமல் இருந்து விடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடா நாட்டில் அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி: இதனால் கனடா நாட்டு மக்கள் ட்ரூடோ மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அங்கு பொதுவாகவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கு முன்பு 2021ல் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதில் கூட ட்ரூடோ கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இப்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியில் இருக்கிறார். அடுத்தாண்டு அங்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் அதிருப்தியால் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications