இந்தியாவை குற்றஞ்சாட்ட "காரணம்" இருக்கு! மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் ட்ரூடோ! இப்போ என்ன சொன்னார்
ஒட்டவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்தியாவைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. முதலில் இந்தியத் தூதரைக் கனடா வெளியேற்றிய நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் இந்தியாவும் கனடா தூதரை வெளியேற்றியது.
இந்தியாவுக்குச் செல்வோருக்குக் கனடா பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்த நிலையில், இந்தியாவும் அதற்குப் பதிலடி தரும் வகையில் வார்னிங்கை வெளியிட்டது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்கப்போவதில்லை என்றும் இந்தியா அறிவித்துள்ளது.

மீண்டும் சர்ச்சை: கனடாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தரப்பு சொன்னதே மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் அவர் மீண்டும் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனடா மண்ணில் கனடா நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். நம்பகமான இடத்தில் இருந்து கிடைத்த தகவலே இதற்கு காரணம்" என்று ட்ரூடோ கூறினார்.
ஜஸ்டின் ட்ரூடோ ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கனடா நாட்டவர் எனக் குறிப்பிடுகிறார். இவர் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பகமான இடம்: தொடர்ந்து பேசிய அவர், "நான் சொல்லும் கருத்துகள் சீரியசானவை.. நம்பகமான இடத்தில் இருந்து தகவலின் அடிப்படையிலேயே இப்படிச் சொல்கிறோம்.. நாங்கள் சட்டத்தின் பக்கம் நிற்கிறோம். உலகில் எந்தவொரு நாடும் தங்கள் சொந்த மண்ணில் குடிமகனைக் கொலை செய்யப்படும் நிகழ்வை ஏற்றுக்கொள்ளாது. இந்த விகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கனடா நாட்டினரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமே தனது நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், இந்திய அரசு இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தைத் தீவிரமான ஒன்றாக எடுத்துக் கொண்டு, நீதியை உறுதி செய்யுமாறு இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எனது வேலை கனடா நாட்டவரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது. அதை நான் தொடர்ந்து செய்யப் போகிறேன்.
பிரதான நோக்கம்: இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகவும் வெளிப்படையாகவும் உரையாடினேன்.. எனது கவலைகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன். எங்கள் நாடு சட்டத்தின்படி ஆட்சி நடக்கும் நாடு.. கனடா நாட்டினரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கிறோம். அதுதான் இப்போது எங்கள் பிரதான நோக்கம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் தங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என இந்தியா கூறிவிட்ட பிறகும் மீண்டும் மீண்டும் ட்ரூடோ இந்தியாவைக் குற்றஞ்சாட்டி வருகிறார்.
விசாரணை: காலிஸ்தான் டைகர் போர்ஸ் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில், இப்போது கனடா பாதுகாப்புப் படைகள் இந்த கொலைக்கும் இந்திய அரசுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக ட்ரூடோ கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications