கனடா: ஹெலிகாப்டரில் தப்பிச் சென்ற 3 சிறைக்கைதிகள்... தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரம்
மாண்ட்ரீல்: கனடா நாட்டில் காவல் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் கியுபெக் நகரத்தில் காவல் தடுப்பு மையமொன்றில் விசாரணை ஒன்றிற்காக மூன்று கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அப்போது அவர்கள் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
ஆர்சன்வில்லே தடுப்பு மையத்திலிருந்து மேற்கு நோக்கி அந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றதாக மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற கைதிகளை கியுபெக் நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள், ராணுவத்தளங்கள் போன்றவற்றிலும் போலீசார் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தரைவழித் தேடலும் நடைபெற்று வருவதாக காவல்துறை தகவல் தொடர்பாளர் ஆட்ரே ஆன் பிலோடியு தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் வெளியான தகவல்களின் மூலம், தப்பிச் சென்ற கைதிகளின் பெயர்கள் யுவெஸ் டெனிஸ், டெனிஸ் லேபெப்ரே, செர்கே போமெர்லியு எனத் தெரிய வந்துள்ளது. தப்பிச் சென்றவர்களை தேடும் முயற்சியில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது அந்நாட்டு போலீஸ்.
இவ்வாறு சிறைக் கைதிகள் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்வது இது முதன்முறையல்ல. கடந்த வருடம் மார்ச் மாதம் அங்குள்ள செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் ஒரு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றனர். பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரின் விமானியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
ஆனால், அப்போது சில மணி நேரங்களிலேயே கடத்தலில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், தப்பிச் சென்ற கைதிகளையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications