நேபாளத்தை விட்டு வெளியேற திரிபுவன் ஏர்போர்ட்டில் முந்தியடிக்கும் வெளிநாட்டவர்கள்
காத்மாண்டு: நேபாளத்தை விட்டு வெளியேற முயன்று வரும் வெளிநாட்டவர்களால் காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிகை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடும் என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு கிளம்ப காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்து வருகிறார்கள். இதனால் விமான நிலையத்தில் எப்பொழுது பார்த்தாலும் வெளிநாட்டவர் கூட்டமாக உள்ளது. கூட்டத்தால் அங்கு கூச்சலும், குழப்பமுமாக உள்ளது. இதனால் போலீசார் சில நேரம் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கின்றனர்.
திரிபுவன் விமான நிலையத்தில் வெளிநாட்டவர்ளை மீட்க ஏராளமான விமானங்கள் வருகின்றன. விமானங்களில் ஏறி நாட்டை விட்டு வெளியேற பலர் முந்தியடித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்திய விமானப் படை விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் திரிபுவன் விமான நிலையத்தில் தரையிறங்கி அங்குள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. இந்திய விமானப்படை வெளிநாட்டு மக்களையும் மீட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.