2 ஆம் வகுப்பு வரை இனி தேர்வு கிடையாது...மகிழ்ச்சி அறிவிப்பு ...இங்கல்ல சைனாவில்...என்ன காரணம்?
பெய்ஜிங்: சீனாவில் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக 6 முதல் 7 வயது குழந்தைகளுக்கு தேர்வு நடத்துவதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
சிறு வயது குழந்தைகளுக்கு தேர்வு, டெஸ்ட் ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்களது உடல்நிலையும் மன நிலையும் பாதிக்கப்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களது நிலையை எண்ணி பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

இதை கருத்தில் கொண்ட சீன அரசு 6 முதல் 7 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தேர்வு நடத்துவதை தடை செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு கல்வி அமைச்சகம் கூறுகையில் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் உடலையும் மனதையும் பாதிக்கிறது. தேர்வுகள் என்பது கல்வியின் ஒரு பகுதியே. சில பள்ளிகளில் அதிகபடியான தேர்வுகளை நடத்தி மாணவர்களுக்கு பெருத்த சுமையை கொடுக்கின்றன. இவை விரைவில் சரி செய்யப்படும்.
ஒரு காலாண்டுக்கு இத்தனை தேர்வுகள்தான் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொடக்க நிலை கல்வியில் முதல் மற்றும் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இனி தேர்வு நடத்தப்படாது. மற்ற வகுப்புகளுக்கு ஒவ்வொரு செமஸ்டரிலும் இறுதி தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். ஆரம்ப நிலை கல்வி படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள், மண்டல தேர்வுகள் நடத்தப்படாது என்றார்.
தொடக்க நிலை வகுப்புகளுக்கு சீனாவில் வீட்டுபாடம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அது போல் ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்களுக்கு வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே செலவிடும் அளவுக்கு வீட்டு பாடம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் இது போன்று தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டால் இந்த குழந்தைகளின் மனநலமும் நன்றாக இருக்கும்.
தற்போது எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் காலையில் சீக்கிரமாகவே குழந்தைகளை எழுப்பி அவர்களுக்கு புத்துணர்வு அளித்து உணவு ஊட்டி, பின்னர் தாயுடன் சேர்ந்து அந்த வகுப்புகளை அவர்கள் கவனிக்கிறார்கள். இந்த நிலையில் ஓபன் புக் அசசஸ்மெண்ட் (புத்தகம் திறந்த நிலையில் திறனறித் தேர்வு) என்பதையும் வைத்து சிறிய குழந்தைகளுக்கு கூடுதல் மன அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
ஏற்கெனவே செல்போன், டிவி என பார்க்கும் குழந்தைகள், இது போல் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகளால் மேலும் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். சில வெளிநாடுகளில் 10 ஆம்வகுப்பு வரை எழுத்துத் தேர்வுகளே நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் இந்தியாவிலும் சிறிய குழந்தைகளுக்கு இருக்கும் மன அழுத்தத்தை போக்க தேர்வுகளை ரத்து செய்தால் நன்றாக இருக்கும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications