"வாழ்நாளில் 100 டன்கள் பால் கறக்கும்.." குளோனிங் பசுக்களை உருவாக்கும் சீனா.. பிளான் இதுதானாம்
குளோனிங் முறையில் புதிய வகை கறவை மாடுகளை சீனா உருவாக்கியுள்ளது.
பீஜிங்: குளோனிங் முறையில் புதிய வகை கறவை மாடுகளை சீனா உருவாக்கியுள்ளது. 'சூப்பர் கவ்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாடுகளை சீனாவின் வடமேற்கில் உள்ள விவசாயத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி சீனாவின் நின்கிக்சியா மாகாணத்தில் குளோனிங்கில் 3 கன்றுக் குட்டிகள் உருவாக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் கூறுக்கின்றன.
மனிதனின் வாழ்நாளில் தவிர்க்க முடியாத ஒரு உணவு பொருள் பால் என்றால் அது மிகையாகாது. ஊட்டச்சத்துமிக்க பால் காலையில் காபியில் தொடங்கி, மதியம் உணவில் தயிராகவும் உணவின் சுவைக்காக நெய்யாகவும் என பல வகைகளிலும் பயன்படுகிறது.
பால் பொருட்கள் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் முக்கிய பொருளாகும். இதனால், உலக சந்தையின் பால் பொருட்களின் வர்த்தகம் பல நூறு பில்லியன் டாலர்களாக உள்ளது.
கறவை மாடுகள்
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் சீனாவும் உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனா பால் உற்பத்திக்காக பெரும்பாலும் வெளிநாடு மாடு இனங்களையே நம்பியுள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீதம் கறவை மாடுகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
'சூப்பர் கவ்ஸ்' மாடுகள்
பால் பொருட்களில் சீனாவின் தேவையை பெருமளவு நியூசிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பூர்த்தி செய்கின்றன. வெளிநாட்டு மாட்டு இனங்களை சார்ந்து இருப்பதற்கு மாற்றாக சீனா மாற்று வழியை நீண்ட காலமாகவே யோசித்து வந்தது. இந்த நிலையில் குளோனிங் முறையில் புதிய வகை கறவை மாடுகளை சீனா உருவாக்கியுள்ளது. 'சூப்பர் கவ்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாடுகளை சீனாவின் வடமேற்கில் உள்ள விவசாயத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
ஆயிரமாக அதிகரிக்க திட்டம்
கடந்த 23 ஆம் தேதி சீனாவின் நின்கிக்சியா மாகாணத்தில் குளோனிங்கில் 3 கன்றுக் குட்டிகள் உருவாக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. குளோனிங் முறையில் புதிதாக 3 கன்று குட்டிகளை உருவாக்கும் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி ஜின் யாபிங்க் கூறுகையில், " இது மிகப்பெரும் திருப்பு முனையாகும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் சூப்பர் கவ்ஸ்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
100 டன்கள் கொள்ளளவு எடை
கறவை மாடுகளை வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கான அடித்தளம் இது. குளோனிங் செய்யப்பட்டு பிறந்த கன்றுகள் 56.7 கிலோ எடை கொண்டதாகவும் 76 செ.மீட்டர் உயரம் கொண்டதாகவும் இருந்தது" என்றார். சீனாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கறவை மாடுகள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் போன ''Dutch Holstein Friesian breed" இனத்தில் இருந்து குளோனிங் செய்யப்பட்டது. சூப்பர்கவ்ஸ்கள் தனது வாழ்நாளில் 100 டன்கள் கொள்ளளவு எடை அளவுக்கு பால் வழங்கும் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவுக்கு போட்டியாக..
உலக வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே சவால் விடுக்கும் வகையில் சீனா இன்று வளர்ந்து வருகிறது. தனது புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி சர்வதேச சந்தையில் கடும் போட்டியையும் சீனா கொடுத்து வருகிறது. அசல் பொருட்களுக்கு அப்படியே நகல் எடுத்து புதிய பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் கில்லாடி நாடான சீனா தற்போது புதுவகை பசு மாடுகளையும் குளோனிங் முறையில் களம் இறக்கியுள்ளது.