பிரசவ வலி ஆண்களுக்கு வந்தால் எப்படியிருக்கும்?
பீஜிங்: பிரசவவலி என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. பத்துமாதம் குழந்தையை சுமந்து வலியோடு பிரசவிக்கும் பெண்களுக்குத்தான் தெரியும் அதன் வலியின் கடுமை. குழந்தையில் அழுகுரல் கேட்ட அடுத்த நொடியே அந்த வலி எல்லாம் பறந்து போய்விடும்.
பிரசவத்தின் உச்சபட்ச வலி எப்படி இருக்கும் என்பதை ஆண்களுக்கு வார்த்தைகளால் உணர்த்தி விட முடியாது. மனைவியை லேபர் வார்டுக்குள் அனுப்பிவிட்டு கதவுக்கு முன்பு நின்று கொண்டு சில கணவன்மார்கள் தவியாய் தவித்துக்கொண்டிருப்பார்கள். சிலரோ கூலாக பேப்பர் படிக்க போய்விடுவார்கள். அவர்களுக்கு பெண்களின் வலியை பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

எனவேதான், இந்த வலியை உணர்வதற்காக சீன மருத்துவமனையில் கருவிகளின் உதவியுடன் ஆண்களுக்கு பிரசவ வலி ஏற்படுத்தப்படுகிறது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் அய்மா மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு, ஆண்களுக்கு பிரசவ வலியை உணரச் செய்வதற்காக வாரம் இருமுறை வகுப்புகள் நடைபெறுகின்றன.
பிரசவ வலியை அனுபவிக்க ஒப்புக் கொண்ட ஆண்களுக்கு, அடிவயிற்றில் உபகரணங்கள் சில பொருத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் மின் அதிர்ச்சி ஏற்படுத்தி வலி உண்டாக்கப்படுகிறது. இதில் 5 நிமிடங்களுக்கு கடுமையான வலி ஏற்படுத்தப்படுகிறது.
முதலில் லேசாக தொடங்கும் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்படுகிறது. ஒன்று முதல் 10 அலகுகள் வரை வலியை அதிகரிக்கிறார் நர்ஸ்.
அனைவராலும் இந்த வலியை தாங்க முடிவதில்லை. சிலர் மூன்று அல்லது நான்கு அலகு எட்டியவுடன் நிறுத்தச் சொல்லி விடுகின்றனர். பெரும் பாலானவர்கள் சில நிமிடங்களிலேயே வலியைத் தாங்காமல், வெளியேறி விடுகின்றனர்.
இதன்மூலம் பெண்களின் பிரசவவலி எத்தனை கடுமையானது என்பதை இந்த வலியின் மூலம் உணர்ந்து கொண்டதாக ஆண்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications