அமெரிக்காவை அலறவிடும் சீனா.. கூடுதல் வரியை 84% ஆக உயர்த்தி அறிவிப்பு.. வர்த்தக போரால் வரும் ஆபத்து
பெய்ஜிங்: சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று 3வது முறையாக 50 சதவீத வரியை அதிரடியாக விதித்துள்ளார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா விதித்த 34 சதவீத கூடுதல் வரியை 84 சதவீதமாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் போட்டி போட்டு வரியை விதிப்பதால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் என்பது தீவிரமாகி உள்ளதோடு, பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை இருநாடுகளையும் சிக்கலில் சிக்க வைக்க உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று உள்ளார். இவர் தொடர்ந்து அதிரடியாக வரிகளை விதித்து வருகிறார். இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கிறது. ஆனால் பிற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த வரிகளை விதிக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதனை சரிசெய்ய ஒவ்வொரு நாடுகளுக்கும், அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிகளை போல் வரியை விதிப்பேன் என்று அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதன்படி அதிபரானதுமே டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். முதற்கட்டமாக கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு அவர் வரிகளை விதித்தார்.
அதன்பிறகு கடந்த 2ம் தேதி இந்தியா உள்பட 100க்கும் அதிகமான நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதேவேளையில் நம் அண்டை நாடும், அமெரிக்காவின் போட்டி நாடாகவும் உள்ள சீனாவுக்கு 34 சதவீத வரி என்பது விதிக்கப்பட்டது. சீனாவுக்கு ஏற்கனவே டிரம்ப் வரி விதித்து இருந்தார். 2 முறை தலா 10 சதவீத வரி வரியை டிரம்ப் விதித்து இருந்தார். அதன்பிறகு கடந்த 2ம் தேதி 34 சதவீத வரியை விதித்தார். இதனால் சீனா பொருட்களுக்கான வரியை பதவியேற்ற 3 மாதத்திலேயே டிரம்ப் 54 சதவீதமாக உயர்த்தினார்.
இதற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. அதோடு அமெரிக்காவுக்கு வரியை விதித்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து வரும் விவசாய பொருட்களை இரண்டு பிரிவாக பிரித்து 10 சதவீதம், 15 சதவீதம் என்று சீனா விதித்தது. மேலும் கடந்த 2ம் தேதி அமெரிக்கா விதித்த 34 சதவீத வரிக்கு போட்டியாக சீனாவும் அமெரிக்காவுக்கு 34 சதவீத வரியை விதித்தது. இந்த வரி உயர்வு என்பது வரும் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சீனா அறிவித்தது.
இதனால் டொனால்ட் டிரம்ப் டென்ஷனானார். அதோடு சீனா உடனடியாக வரியை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் 50 சதவீத வரியை விதிப்பேன் என்று டிரம்ப் வார்னிங் செய்தார். ஆனால் சீனா வரியை குறைக்கவில்லை. இதையடுத்து நேற்று சீனாவுக்கு டிரம்ப் கூடுதலாக 50 சதவீத வரியை விதித்தார். இதனால் சீனா மீதான வரி என்பது 104 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சீனாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பதிலடி தரப்படும் என்று சீனா கூறியது. அதன்படி இன்று சீனாவும், அமெரிக்கா மீதான கூடுதல் வரியை அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதாவது அமெரிக்கா 34 சதவீத வரி விதிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டதை 84 சதவீதமாக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது. இதனை சீனாவின் நிதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக சீனா நிதியமைச்சகம் சார்பில், ‛‛அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு 104 சதவீத வரியை விதித்துள்ளது. இதற்கு நிகராக சீனாவும் அமெரிக்காவுக்கு விதித்த 34 சதவீத கூடுதல் வரியை 84 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்த வரி உயர்வு என்பது ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருநாடுகள் இடையேயான வரி விதிப்பு நடவடிக்கையால் அந்த நாட்டு மக்கள் மற்றும் தொழிலதிபர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர். ஏனென்றால் அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ், உணவு பொருட்கள் செல்கின்றன. இனி அந்த பொருட்கள் அமெரிக்காவுக்கு செல்வது குறையும். இதனால் அமெரிக்கா மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதோடு அங்கு விலையேற்றம் உருவாகும். அதேபோல் சீனாவுக்கு மாற்றாக பிற நாட்டை அமெரிக்கர்கள் அணுக வேண்டியிருக்கும்.
அதேபோல் அமெரிக்காவில் இருந்து சோயாபீன், மாட்டிறைச்சி உள்பட பல உணவு பொருட்கள் சீனாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சீனாவின் கூடுதல் வரி விதிப்பால் அமெரிக்காவில் இருந்து அந்த பொருட்கள் சீனாவுக்கு செல்வது குறையும். இதனால் சீனா மக்களுக்கும் பிரச்சனை என்பது ஏற்படும். அதேபோல் சீனாவும், அமெரிக்காவும் தங்களின் நாட்டு பொருட்களுக்கு வேறு நாடுகளின் சந்தையை தேட வேண்டிய சூழல்ஏற்படும். இதனால் அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போரால் இருநாட்டு மக்களும், தொழிலதிபர்களும் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications