டிரம்பிடம் சரண்டராகும் சீனா.. அமெரிக்காவுடன் முடிவுக்கு வரும் வர்த்தக போர்? இறங்கி வரும் சீனா!
பெய்ஜிங்: அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகள் மாறி மாறி வரிகளை விதித்து கொண்டன. இந்த வரிவிதிப்பின் காரணமாக இருநாடுகள் இடையே வர்த்தக போர் என்பது வெடித்துள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா வணிகவரித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்கா இறங்கி வந்து பேசாது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாக சீனா தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்த நிலையில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தான் அமெரிக்காவின் அதிபரானது. அவர் பொறுப்பேற்று 3 மாதங்கள் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆனால் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் பல நாடுகளுக்கு வரிகளை விதிக்கிறார்.

கடந்த 2ம் தேதி இந்தியா உள்பட 100க்கும் அதிகமான நாடுகளுக்கு வரிகளை விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீத வரிகளை விதித்தார். இருப்பினும் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் டொனால்ட் டிரம்ப்.
ஆனால் டொனால்ட் டிரம்ப் சீனாவை மட்டும் விடவில்லை. இந்த 3 மாதத்தில் மட்டும் சீனாவுக்கு 145 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதற்கு பதிலடியாக சீனா 125 சதவீத வரிகளை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். மேலும் சீனா வரியை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சீனா மீதான வரியை 245 சதவீதமாக அதிகரிப்போம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடித்துள்ளது. இருநாடுகளும் மாறிமாறி வரியை விதிப்பதால் அவர்களுக்குள்ளான உறவு மோசமான நிலைக்கு செல்வதோடு, இருநாடுகளின் தொழிலதிபர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை உணர்ந்து சீனா, இனி அமெரிக்காவுக்கு வரி விதிக்கப்போவது இல்லை என்று அறிவித்து விட்டது.
இதன் தொடர்ச்சியாக தான் அமெரிக்காவுடன் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சீனாவின் வர்த்தக அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சீன வர்த்தக துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹீ யோங்கியான் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக ஹீ யோங்கியான் கூறுகையில், ‛‛அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் என்பது சீனா மீது அழுத்தம் தரும் வகையிலும், மிரட்டி பார்ப்பதாகவும் மட்டுமே உள்ளது. அமெரிக்கா உடன் பொருளாதாரம் - வர்த்தக பேச்சுவார்த்தை திறந்த மனதுடன் சீனா இருக்கிறது. இதனால் வரி விதிப்பு அச்சுறுத்தல் தொடர்பான விஷயத்தை அமெரிக்கா கைவிட வேண்டும். சீனாவுடனான வேறுபாடுகளை அமெரிக்கா சமமான உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகை சார்பில் ஒரு அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டது. வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலி லீவிட் கூறுகையில், ‛‛டொனால்ட் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்துக்கு திறந்த மனதுடன் இருக்கிறார். ஆனால் அந்த ஒப்பந்தம் தொடர்பான முயற்சியை சீனா தொடங்க வேண்டும். அமெரிக்கா பலம் வாய்ந்து இருக்கிறது. இப்போது பந்து என்பது சீனாவின் பக்கம் உள்ளது.
சீனா தான் எங்களுடன் வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். நாங்கள் அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டியது இல்லை. சீனா, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யவும், அமெரிக்க நுகர்வோரையும் வேண்டும் என்று நினைக்கிறது'' என்று தெரிவித்தார். கரோலி லீவிட்டின் இந்த பேச்சை தொடர்ந்து தான் சீனா வர்த்தக அமைச்சகம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பாசிட்டிவான விஷயத்தை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications