பாகிஸ்தானுக்கு சீனா தரும் ஸ்டெல்த் ஜெட்.. இந்தியாவுக்கு சிக்கல் வருமா.. கவனிக்க வேண்டிய விஷயம் தான்!
பெய்ஜிங்: பாகிஸ்தானுக்கு 40 ஷென்யாங் J-35 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கச் சீனா உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாகிஸ்தானுக்குச் செல்வதால் யாருக்கு லாபம்.. இதன் மூலம் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் மோதல் இருந்தபோது நமது விமானப்படை பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால், இப்போது பாகிஸ்தானுக்கு 40 ஷென்யாங் J-35 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கச் சீனா உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

J-35 விமானங்களைப் பாகிஸ்தான் தனது படையில் வெற்றிகரமாகச் சேர்த்துவிட்டால்.. ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இணையும். இப்போது நமது நாட்டில் எந்தவொரு ஸ்டெல்த் போர் விமானமும் இந்திய விமானப்படையில் இல்லை.
இந்தியாவின் ஸ்டெல்த் விமானங்கள்
உள்நாட்டிலேயே ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் வரும் நடுத்தர போர் விமானத்தை (AMCA) இந்தியா டெலவப் செய்து வந்தாலும் கூட அது சோதனைகளை எல்லாம் கடந்து விமானப்படையில் சேர இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகிவிடும். 2035ம் ஆண்டு போலத் தான் இந்த ஏஎம்சிஏ விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பாக இந்திய விமானப்படையின் மூத்த வீரர்கள் சிலர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக இந்திய விமானப்படையின் முன்னாள் போர் விமானி மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் குழு கேப்டன் அஜய் அஹ்லாவத் கூறுகையில், "பாகிஸ்தான் விமானிகளுக்குச் சீனாவில் பயிற்சி அளிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
ஆச்சரியம் இல்லை
பாகிஸ்தான் இந்த விமானங்களைப் பெறுவது ஆச்சரியமான விஷயம் அல்ல.. ஏனென்றால் அவர்களின் போர் விமானிகளின் குழு ஆறு மாதங்களுக்கும் மேலாகச் சீனாவில் உள்ளது.. அந்த விமானத்தை இயக்க பயிற்சி பெற்ற பிறகே அதை விமானப்படையில் சேர்க்க உள்ளனர். அதேநேரம் J-35க்கு பதிலாக அதைவிடச் சற்று குறைவான திறன்களைக் கொண்ட FC-31 விமானங்களையே பாகிஸ்தானுக்குச் சீன தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது" என்றார்.
சீனா உள்நாட்டில் J-35 என்ற பெயரிலேயே விமானங்களை அறிமுகப்படுத்தியது. அதே விமானங்களில் சில திறன்களைக் குறைத்து FC-31 என்ற பெயரில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த குறைந்த திறன் கொண்ட விமானங்களையே இப்போது சீனா பெறுகிறது. கேப்டன் அஜய் மேலும் கூறுகையில், "சீன விமானங்கள் பாகிஸ்தானுக்குப் போவது ஆச்சரியம் இல்லை. ஆனால், திட்டமிட்ட காலத்திற்கு முன்கூட்டியே இந்த விமானங்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவது மட்டுமே ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.
இந்திய விமானப்படை
இதுநாள் வரை இந்திய விமானப்படை எல்லா திறன்களிலும் பாகிஸ்தானை விட பலம் வாய்ந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அதுவும் இரு தரப்பு மோதல் என்றால் இந்திய விமானப்படையின் ஆதிக்கமே முழுமையாக இருக்கும்.. இந்த J-35 விமானங்களின் வருகை அந்த ஆதிக்கத்தைக் குறைக்கும் அபாயம் உள்ளது.
கேப்டன் அஜய் இது குறித்துக் கூறுகையில், "உண்மையில் இது கவலை தரும் செய்திதான்.. சுதந்திரம் பெற்றதிலிருந்து பாகிஸ்தானை விட நமது விமானப்படை ஒருபடி மேலே தான் இருந்துள்ளது. பாகிஸ்தான் வசம் J-35 போனால் அது நமக்குக் கவலையை ஏற்படுத்தும். இப்போது நம்மிடம் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட ஜெட் என்றால் F-35 மற்றும் Su-57 என இரண்டு ஆப்ஷன் மட்டுமே உள்ளது" என்றார்.
அமெரிக்கா ரஷ்யா
இதில் F-35 என்பது அமெரிக்காவின் பைட்டர் ஜெட் உலகின் தலைசிறந்த பைட்டர் ஜெட்களில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை தொடங்கினாலே அது முடியப் பல காலம் ஆகிவிடும். அடுத்து ரஷ்யாவின் Su-57. ஏற்கனவே நம்மிடம் பல ரஷ்யத் தொழில்நுட்பம் பல ஆயுதங்கள் இருப்பதால் Su-57 ஒரு நல்ல சாய்ஸ் தான். ஆனால், அதிலும் பேச்சுவார்த்தை இறுதியாகவில்லை.
வேறு ஆப்ஷன்கள்
வேறு ஆப்ஷன்கள் குறித்துப் பேசிய கேப்டன் அஜய், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் AMCA ஒரு நல்ல தீர்வு தான். ஆனால், அதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பது சிக்கல். இந்த திட்டத்தை தேசயளவில் முன்னிறுத்திக் கூடிய விரைவில் கொண்டு வர வேண்டும்" என்றார்.
ஏஎம்சிஏ என்பது ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜன்சி விமானப்படை மற்றும் கடற்படையுடன் இணைந்து உருவாக்கும் ஒரு இரட்டை எஞ்சின் ஸ்டெல்த் போர் விமான திட்டமாகும். இது இப்போது தான் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இதன் புரோடோடைப் கூட 2028-29ல் தான் வெளியாகும். செயல்பாட்டிற்கு வர 2035 கூட ஆகலாம். ஆனால், அதற்குள் சீனாவிடம் ஸ்டெல்த் விமானங்கள் போய்விடும் என்பதால் நமக்கு இப்போது பேக்அப் பிளான் அவசியமாகிறது.












Click it and Unblock the Notifications