என்னாது சீனாவோட கண்ணாடிப் பாலம் உடைஞ்சுருச்சா?
பெய்ஜிங்: சீனாவில் யூண்டாய் மலையின் மேல் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடிப் பாலத்தில் விரிசல் விட்டுள்ளதாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
"யு" வடிவில் அமைக்கப்பட்டுள்ள அந்த பாலம் ஹெனானில் அமைந்துள்ளது. இப்பாலத்தில் இருந்து கீழே உள்ள மலை முகடுகளையும், கீழப் பரப்பையும் பயணிகள் ரசிக்க முடியும்.
இப்பாலத்தை உருவாக்கிய வல்லுனர்கள் இது அசைக்க முடியாத வலிமை பெற்றது, பாதுகாப்பானது என்று தெரிவித்திருந்தனர். ஏனெனில், இரண்டு கட்ட கண்ணாடிப் பரப்பும், மூன்று கட்ட வலிமையான தரையமைப்பும் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

எடை தாங்கும் வலிமை:
ஒவ்வொரு கண்ணாடிப் பேனலும் 27 மில்லி மீட்டர் கனமும், 1700 பவுண்டு எடையையும் தாங்கும் வலிமையுடையது என்று தெரிவித்திருந்தனர்.

ஹைய்யஓஓ விழுந்துருச்சே:
இந்நிலையில் சில சுற்றுலாப் பயணிகளை இத்தனை பாதுகாப்பு வாக்கியங்களையும் தாண்டி இந்த பாலம் சமீபத்தில் பயமுறுத்தியுள்ளது. ஒருவர் கை தவறி எவர்சில்வர் கப் ஒன்றினை அந்தப் பாலத்தில் போட்டதால் சிறிய அளவிலான விரிசல்கள் அந்தப் பாலத்தில் எழுந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நிலநடுக்கம் போன்ற அதிர்வு:
"அந்த பாலத்தின் கடைக்கோடியில் நான் நின்றிருந்த போது சட்டென்று ஒரு நிலநடுக்கம் போன்ற அதிர்வு என் காலின் கீழ் ஏற்பட்டது" என்று அந்த சம்பவம் நடைபெற்ற போது பாலத்தில் நின்றிருந்த ஒரு பெண் பயணி மயிர்க்கூச்செறிய தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாலத்தில் நின்றிருந்த பயணிகள் பயத்துடன், சத்தமிட்டுக் கொண்டே பாலத்தின் முடிவை நோக்கி ஓடியுள்ளனர்.

விரிசல் இருக்கு ஆனா பயமில்லை:
இதனை பாதுகாப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். "பாதுகாப்பு அதிகாரிகள் சில சிறிய விரிசல்களை பாலத்தில் கண்டறிந்துள்ளனர்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒரு கூர்மையான பொருளால் அந்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், இதனால் பாதுகாப்பிற்கு எந்த குறையும் ஏற்படாது" என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

சரிசெய்யும் வேலைகள் தீவிரம்:
தற்போது விரிசலை சரிசெய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இது உலகம் முழுவதிலும் நடைபெறும் விஷயம்தான். சில நேரங்களில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படத்தான் செய்யும் என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications