போரை தொடங்கவும் தயங்க மாட்டோம்! தைவானை நிச்சயம் இணைப்போம்! உறுமும் சீனா.. மிரளும் உலக நாடுகள்
பெய்ஜிங்: தைவான் விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாகச் சீனா முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
சீனாவின் சமீபத்திய செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சீனாவின் செயல்பாடுகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டத்தைத் தெரிவித்து வருகின்றன.
ஒருபுறம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, சீனா தனது ராணுவ கப்பலை அனுப்பி உள்ளது.
வேலையை காட்டும் சீனா.. அவசர அவசரமாக சென்னை லைட் ஹவுஸ் மேலே ஏறிய
தைவான் விவகாரம்
அதேபோல மறுபுறம் தைவான் விவகாரத்திலும் சீனா தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சீனா தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்றே தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் தைவான் தனி நாடு என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா உட்பட சில நாடுகள் தைவானின் தனி நாடு கோரிக்கையை ஏற்றுள்ளது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது தைவானுக்கும் செல்வார்கள்.
நான்சி பெலோசி
அப்படித்தான் கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேரடியாகத் தைவான் சென்றார். அமெரிக்காவில் உச்சபட்ச பதவியில் இருக்கும் ஒருவர் தைவான் செல்வது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தேவையில்லாமல் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சாடி உள்ளது.
போர் திட்டம்
மேலும், நான்சி பெலோசி தைவானில் இருந்த போதே, அங்கு அத்துமீறிப் போர் ஒத்திகைகளையும் நடத்தியது. தைவானுக்குச் சொந்தமான வான்வழி மண்டலத்தில் சீனப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகத் தைவான் கூறுகிறது. மேலும், போர் ஒத்திகை என்ற பெயரில் சீனா போருக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் பரபர குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாகச் சீனா வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனா பதிலடி
இந்நிலையில், தைவானை தங்களுடன் இணைக்கப் போவதாகச் சீனா புதன்கிழமை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானை அமைதியான முறையிலேயே தங்கள் நாட்டுடன் இணைக்க விரும்புவதாகவும் இருப்பினும் இதற்கு ராணுவத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் ராணுவம்
சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விவகாரத்தில் நாங்கள் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றுவோம். அமைதியான முறையில் தைவானை மீண்டும் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதேநேரம் தேவைப்பட்டால் இதற்காக நாங்கள் (ராணுவ) சக்தியைப் பயன்படுத்துவும் தயங்க மாட்டோம். இதையும் கூட நாங்கள் எங்கள் ஆப்ஷனாகவே வைத்துள்ளோம்
கடைசி ஆப்ஷன்
ஆனால், ராணுவ நடவடிக்கை என்பதைக் கடைசி முயற்சியாகவே பயன்படுத்துவோம். பிரிவினைவாத சக்திகள் அல்லது வெளிநாட்டு சக்திகள் ஆத்திரமூட்டல் நடவடிக்கையில் எல்லை மீறி ஈடுபட்டால், அப்போது மட்டும் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். ஒரு விஷயத்தை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
வெளிநாடுகள்
தைவான் விவகாரம் என்பது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. அதில் எந்தவொரு வெளிநாடு தலையிட்டு நாட்டை பிளவுபடுத்த முயன்றாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தேசிய ஒற்றுமைக்காக ஒன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.. எங்கள் தாய்நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கும் வரலாற்று இலக்கு விரைவில் நனவாக வேண்டும். அது நனவாகும் என நம்புகிறோம்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.