இதுதான் சீனா.. ஈரானுக்கு ஆதரவாக இறங்கிய சீன கடற்படை? இஸ்ரேலுக்கு அருகே நிறுத்தப்பட்ட உளவு கப்பல்கள்!
பெய்ஜிங்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு சீன ஸ்பை கண்காணிப்பு கப்பல்கள் இஸ்ரேல் அருகே களமிறக்கப்பட்டு உள்ளன. 855 மற்றும் 815A ஆகியவை பாரசீக வளைகுடாவில்.. இஸ்ரேலுக்கு மிக அருகில் சுற்றி வருகின்றன. இவை இஸ்ரேலை உளவு பார்க்க களமிறக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
சீனாவின் எச்சரிக்கை
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செய்தி தொடர்பாளர் சந்திப்பில் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். அதில், அமெரிக்கா படைகளை களமிறக்குவது, ஈரானை தாக்குவது என்பது ஈரானின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் எதிரான மீறலாகக் கருதப்படும். மற்ற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கிறது.

அமெரிக்கா ஈரானை தாக்கினால் கடுமையான சேதங்கள், பாதிப்புகள் ஏற்படும். மேலும் சர்வதேச உறவுகளை பாதிக்கும்.. அதோடு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சீன விடுத்த இந்த எச்சரிக்கையின் மத்தியில், இரண்டு சீன மின்னணு கண்காணிப்பு ஸ்பை கப்பல்களான 855 மற்றும் 815A ஆகியவை பாரசீக வளைகுடாவில் களமிறக்கப்பட்டு உள்ளன.
சீனாவின் எச்சரிக்கைக்கு என்ன காரணம்?
சீனா திடீரென அங்கே உளவு கப்பல்களை அனுப்ப காரணம் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த தனது உயர்மட்ட உதவியாளர்களிடம் ஒப்புதல் தெரிவித்திருந்தார். ஆனால், இன்னும் இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்தும் வரை பொறுத்திருந்து பார்க்க டிரம்ப் விரும்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் ஃபோர்டோவ் செறிவூட்டல் ஆலை அமெரிக்காவின் இலக்குகளில் ஒன்றாக இருக்கலாம். இது நிலத்தின் அடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. இதனை அழிப்பது மிகவும் கடினம். சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் மட்டுமே அதை தகர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்த முடிவு செய்துவிட்டீர்களா என்று டிரம்ப்பிடம் கேட்டபோது, "நான் அதைச் செய்யக்கூடும், செய்யாமலும் போகலாம்" என்று பதிலளித்தார். மேலும், "அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். ஒரு வாரத்திற்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்" என்றும் அவர் கூறினார். ஈரான் நிபந்தனையின்றி தனது அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பதை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
அதோடு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரித்துள்ளது. பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட இரண்டு போர் கப்பல்கள் கிழக்கு மத்திய தரைக்கடல் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அப்பகுதியில் வேறு இடத்தில் இருந்த இந்த கப்பல்கள், தற்போது இஸ்ரேல் அருகே திருப்பி விடப்பட்டுள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிகள், இது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று தெரிவித்தனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். மேலும், ஈரான் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க இஸ்ரேலுக்கு உதவக்கூடும். கடந்த ஆண்டு அக்டோபரில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை முறியடிக்க அமெரிக்க கப்பல்கள் இதேபோன்ற பங்கை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில்தான் அமெரிக்காவை எதிர்க்கும் விதமாக சீனா உளவு கப்பல்களை அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications