"அப்பாவி.. " கொரோனா பற்றி முதல்முறையாக வாயை திறந்த சீனாவின் "பேட் வுமன்".. வுஹனில் என்ன நடந்தது?
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு சீனாவை சேர்ந்த "பேட் வுமன்" என்று அழைக்கப்படும் ஷி ஷெங்கிலி தற்போது பதில் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு மியூட்டேஷனாக மாறி வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனா பரவ தொடங்கிய சீனாவை தவிர மற்ற நாடுகள் அனைத்தையும் இந்த வைரஸ் மிக மோசமாக தாக்கிக்கொண்டு இருக்கிறது. சீனா மட்டும் இதில் பெரிதாக பாதிக்காமல் தப்பித்த நிலையில், இது ஒருவேளை சீனாவின் பயோ வாராக இருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வைரஸின் தோற்றத்திற்கு சீனாவின் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டிய நிலையில், தற்போதைய அதிபர் பிடனும் இதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை கொல்லும் 3டி மாஸ்க்... இதை அணிந்தால் வைரஸ் உங்களை தொட கூட முடியாதாம்
என்ன காரணம்
கொரோனா வைரஸின் தோற்றத்திற்கு சீனா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு.
1. இந்த கொரோனா வைரஸ் வுஹன் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டு அது வேகமாக பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, கசியவிடப்பட்டு இருக்கலாம் அல்லது தவறுதலாக கசிந்து இருக்கலாம்.
2. 9 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் யானன் பகுதியில் உள்ள குகையில் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அதைத்தான் மோசமான வைரஸாக உருமாற்றம் செய்ய வைத்து வுஹன் ஆராய்ச்சி மையம் பரப்பி விட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
3. பல்வேறு வைரஸ்களை ஆராய்ச்சி செய்யும் வுஹன் வைரஸ் ஆராய்ச்சி மையத்தின் பி4 ஆராய்ச்சி மையத்தில் gain of function மூலம் வெளவ்வாலின் கொரோனா வைரசை உருமாற்றி மனிதர்களுக்கு பரவும் வகையில் மாற்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
என்ன புகார்
இந்த நிலையில்தான் வுஹன் வைரலாஜி ஆராய்ச்சி மையத்தின் மூத்த பெண் ஆராய்ச்சியாளர் ஷி ஷெங்கிலி மீது கவனம் திரும்பி உள்ளது. உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர் இவரை பேட் வுமன் என்று அழைக்கிறார்கள்.சீனாவை சேர்ந்த ஷி ஷெங்கிலி வுஹன் வைரலாஜி மையத்தில் 18 வருடங்களாக கொரோனா குடும்ப வைரஸ் குறித்தும் வௌவால்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார். கொரோனா குடும்பத்தை சேர்ந்த சார்ஸ் வைரஸை ஆராய்ச்சி செய்து வந்தார்.
ஆராய்ச்சி
கொரோனா வைரஸ் கசிந்ததாக நம்ப கூடிய வுஹன் ஆராய்ச்சி மையத்தின் பி4 சோதனை கூடத்தில்தான் இவரும் பணியாற்றி உள்ளார். ஷி ஷெங்கிலி 2013ல் கண்டுபிடித்த வௌவால் ஒன்றின் உடலில் இருந்த வைரஸ் தற்போது உலகில் பரவும் கொரோனா வைரஸோடு 96.2 ஒத்து போவதாக கூறப்படும் நிலையில், இவர்தான் கொரோனா வைரஸை உருவாக்கி பரப்பி விட்டாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
பதில்
இந்த நிலையில் இது தொடர்பான புகார்களுக்கு ஷி ஷெங்கிலி தற்போது பதில் அளித்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் எங்கள் கூடத்தில் இருந்து பரவவில்லை. இதற்கு நான் எப்படி ஆதாரம் அளிக்க முடியும். எங்கள் கூடத்தில் இருந்து வைரஸ் பரவாத போது, இல்லாத ஆதாரத்தை நான் எப்படி காட்ட முடியும். உலகம் எப்படி இந்த தியரிக்கு வந்தது என்று தெரியாது.
தியரி
அப்பாவி விஞ்ஞானி மீது அசுத்தத்தை வீசுகிறார்கள். தொடர்ந்து என் மீது அசுத்தத்தை வாரி இரைக்கிறார்கள். நாங்கள் ஆய்வு செய்த கொரோனாவிற்கும், முதலில் பரவ தொடங்கிய கொரோனாவிற்கும் தொடர்பு இல்லை. இதன் ஜீனோம் எங்கும் ஒத்துப்போகவில்லை. உலக சுகாதார மைய ஆய்விலும் கூட இது இயற்கையில் தோன்றி இருக்கலாம் என்றும் கூறிவிட்டனர்.
ஆண்டிபாடி
அதேபோல் எங்கள் ஊழியர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் ஏற்படவும் இல்லை. அப்படி இருக்கும் போது எங்களை இதை குற்றஞ்சொல்ல கூடாது என்று "பேட் வுமன்" என்று அழைக்கப்படும் ஷி ஷெங்கிலி பதில் அளித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மறுப்பு
இவர் இப்படி பதில் அளித்தாலும், வுஹன் ஆராய்ச்சி மையத்தின் பி4 மையத்திற்குள் உலக சுகாதார மைய அதிகாரிகள் விசாரணைக்கு அனுமதிக்கப்படாதது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வுஹன் ஆராய்ச்சி மையத்தில் வைரஸ் தோன்றவில்லை என்றால் சீனா ஏன் இதை தடுக்க பார்க்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது.