பாகிஸ்தான் சென்ற சீனா அதிபர் ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சென்ற சீனா அதிபர் ஷி ஜின்பிங்க்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு சீனா அதிபர் பயணம் மேற்கொண்டிருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சீனா அதிபர் ஜின்பிங் தலைமையில் தொழிலதிபர்கள், சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இன்று இஸ்லாமாபாத் சென்றடைந்தது. இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன், பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ரகீல் ஷரீப் மற்றும் அமைச்சர்கள் சீனா அதிபரை வரவேற்றனர்.

பின்னர் ஜின்பிங்குக்கு முப்படையினர் அணிவகுப்புடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. பாகிஸ்தான், சீனா தேசிய கீதங்களை குழந்தைகள் பாடி ஜின்பிங் தலைமையிலான குழுவை வரவேற்றனர்.
இன்று பாகிஸ்தான் அதிபர், பிரதமரை சந்திக்கும் ஜின்பிங், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நாளை உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தின் போது பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான் இ பாகிஸ்தான் விருது ஜின்பிங்குக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. அத்துடன் சுமார் ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தமும் இந்த பயணத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications