நரேந்திர மோடி.. இந்தியாவின் 'நிக்ஸன்'.. சீனாவிலிருந்து பலே பாராட்டு!
பெய்ஜிங்: இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, இந்தியாவின் நிக்ஸன் என்று சீன அரசைச் சேர்ந்த சர்வதேச அரசியல் நிபுணர் லியூ ஜோங்யி புகழாரம் சூட்டியுள்ளார்.
மோடியின் வரவால், இந்தியா, சீனா இடையிலான வர்த்தகத் தொடர்புகள் அதிகரிக்கும் என்றும் லியூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதை மனதில் கொண்டுதான் அவர் மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனுடன் மோடியை ஒப்புமைப்படுத்திப் பேசியுள்ளார்.
நிக்ஸன் என்ன செய்தார்...
1972ம் ஆண்டு நிக்ஸன் சீனாவுக்கு விஜயம் செய்தார். அவரது விஜயம் அப்போது வெகுவாக பரபரப்புடன் பேசப்பட்டது. மேலும் அவர் விஜயம் செய்த வாரம், உலகத்தையே புரட்டிப் போட்ட வாரமாககவும் வர்ணிக்கப்பட்டது. மேலும் அதுவரை எதிரும் புதிருமாக இருந்த சீனாவையும், அமெரிக்காவையும் நிக்ஸனின் பயணம் இணைத்து வைத்தது. வர்த்தக தொடர்புகளையும் திறந்து விட்டது.
நிக்ஸன் போலவே...
நிக்ஸன் போலவே மோடியின் பிரதமர் காலமும், சீனா, இந்தியா இடையே தொடர்புகளையம், நட்பையும் வலிமைப்படுத்தும் என்று சீனாவில் நம்புகிறார்கள். இதையே லியூவின் பேச்சும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
லியூ சொல்வது என்ன...
லியூ கூறுகையில், நரேந்திர மோடியின் அணுகுமுறைகள் செயல்பாடுகள் சீனர்களைப் போலவே உள்ளது. எனவே இயல்பாகவே அவரது அரசுக்கும், சீனாவுக்கும் இடையிலான நட்பும் நெருக்கமாகும் என்று நம்பலாம்.
வலதுசாரி தலைவர்
வலதுசாரி தலைவரான மோடி, இந்தியாவின் நிக்ஸன் என்று அழைக்கப்படும் அளவுக்கு சீனா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவார் என்றும் நம்பலாம். மோடியின் செயல்படும் விதம், கொள்கைகள் உள்ளிட்டவை சீனாவை ஒத்துள்ளன.
மோடியை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது இதனால்தான்...
மோடியின் செயல்பாடுகளும், அவரது சித்தாத்தங்களும் சீனாவை ஒத்துள்ள காரணத்தால்தான் மேற்கத்திய நாடுகள் அவரை எதிர்க்கின்றன. கவலைப்படுகின்றந.
அமைதி, ஸ்திரத்தன்மை
அண்டை நாடுகளுடன் அமைதி, ஸ்திரமான உறவு ஆகியவற்றை மோடி பேண வேண்டியது அவசியம். அப்போதுதான் தனது நாட்டிலும் சரி, பிராந்திய அளவிலும் சரி நீடித்த அமைதி, நிலைத்த பொருளாதார வளர்ச்சியை அவர் எட்ட முடியும். மேலும் இந்தியாவையும் அவர் சுயசார்பு கொண்ட நாடாக மாற்ற முடியும்.
அபே போல இருக்க மாட்டார் மோடி
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே போல நரேந்திர மோடி இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அபே தனது அவசரக்குடுக்கை முடிவுகளால் சீனாவை விரோதியாகவே பார்க்கிறார். ஆனால் மோடி அபே போல இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். மேலும் அதனால் இந்தியாவுக்கு எந்த லாபமும் இருக்காது.
பாஜக மதவாத கட்சி அல்ல
பாஜக தற்போது மாறி விட்டது. மதவாதத்தை அது கிட்டத்தட்ட கைவிட்டு விட்டது. மோடியும் சரி, பாஜகவும் சரி வளர்ச்சி குறித்து மட்டுமே பேசி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவுடன் நல்ல நட்பு
மோடிக்கும், சீனாவுக்கும் இடையே குஜராத் முதல்வராக நல்ல நட்பு உள்ளது. குஜராத் முதல்வராக 3 முறை சீனாவுக்குப் போயுள்ளார் மோடி. கடைசியாக 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் சீனாவுக்குப் போயிருந்தார். அப்போது ரூ. 400 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சீனாவும், மோடியும் கையெழுத்திட்டனர் என்பது நினைவிருக்கலாம்.