ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேரத் துடிக்கும் பள்ளி மாணவிகள்: கவலையில் இங்கிலாந்து
லண்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர இங்கிலாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 3 பேர் சிரியா சென்றுள்ளனர். பள்ளி மாணவிகள் தீவிரவாத அமைப்பில் சேர சென்றுள்ளது கவலை அளிப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளான கதீஜா சுல்தானா(16), ஷமீமா பேகம்(15) மற்றும் ஒரு 15 வயது சிறுமி ஆகியோர் தாங்கள் வெளியே செல்வதாக தங்களின் பெற்றோரிடம் கடந்த 17ம் தேதி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் லண்டன் அருகே உள்ள கேட்விக் விமான நிலையத்தில் இஸ்தான்புல் செல்லும் விமானத்தில் ஏறியது கேமராவில் பதிவாகியிருந்தது.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் துருக்கி சென்று அங்கிருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர உள்ளது தெரிய வந்துள்ளது. பள்ளி மாணவிகள் தீவிரவாத அமைப்பில் சேர ஆர்வம் காட்டுவது கவலை அளிப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லீம்கள் சிரியா மற்றும் ஈராக் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் சிரியா மற்றும் ஈராக் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.