எங்க இடத்துல நாங்க கட்றோம்... அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் சீனா பதில்
பெய்ஜிங்: சீனாவின் இறையாண்மைக்கு உட்பட இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சாதாரண நடவடிக்கை என்று அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான 3,488 கிலோமீட்டர் நீள எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது.
அதைத்தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் தங்கள் ராணுவத்தைக் குவித்து வருகின்றன. மேலும், பிரச்னையை சரி செய்ய ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
புதிய கிராமம்
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அருணாச்சலபிரதேச எல்லையில் சீனா புதிய கிராமம் ஒன்றைக் கட்டியிருக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் எவ்வித கட்டுமானங்களும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளுடன் ஒரு கிராமமே கட்டப்பட்டுள்ளது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரியவந்தது.
அருணாச்சல பிரதேசம் எங்களுடையது
இந்தச் செய்தி சர்வதேச அரங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், "சீனா-இந்தியா எல்லையின் கிழக்குப் பகுதியில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. சீனாவின் ஒரு பகுதியான ஜங்னன் பகுதி, அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை" என்றார்.
எங்கள் பகுதியில் கட்டுமானம்
அருணாச்சல பிரதேசம் சீனாவின் தெற்கு திபத்திற்கு உட்பட்ட பகுதி என்று சீனா தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய அவர், "சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது என்பது மிகவும் சாதாரணமான நடவடிக்கை. இது முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம்" என்றார்.
இந்தியா பதில்
முன்னதாக, சீனாவின் கட்டுமானம் தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், எல்லைப் பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்களின் கட்டுமானத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் எல்லையிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியா பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாகவும், நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.