கொரோனா: உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தனிமைப்படுத்தி கொண்டார்
ஜெனிவா: தம்முடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதால் தாம் தனிமைப்படுத்திக் கொண்டதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேரழிவு காலத்தில் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது.
சீனாவுக்கு ஆதரவான நிலையை உலக சுகாதார அமைப்பு மேற்கொள்கிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதனால் நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும் கொரோனா பரவல் தொடர்பான பல்வேறு எச்சரிக்கைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டே வருகிறது.
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அதில், தம்முடன் தொடர்பில் இருந்த சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நான் நலமுடன் உள்ளேன். எனக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை. வீட்டில் இருந்தே பணிபுரிகிறேன் என கூறியுள்ளார்.