பணத்தை அள்ளி குடுத்துருக்காங்க... ஐக்கிய அரபு அமீரகத்தை பாராட்டி தள்ளும் தாய்லாந்து... காரணம் என்னனு தெரியுமா?
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாடு (COP28), துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. இது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களில் சமரசம் செய்து கொள்ளாமல், சுற்றுச்சூழல் ரீதியில் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முயலும் சர்வதேச சமூகத்திற்கு ஒரு முக்கியமான தருணம் ஆகும்.
தாய்லாந்தின் துணை பிரதமரும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பட்சரவத் வோங்சுவான் (Phatcharavat Wongsuwan), இதே கருத்தை எதிரொலித்துள்ளார். அவரது கூற்றுப்படி, காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கு தேவையான திறன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை, வளரும் நாடுகளுக்கு COP28 வழங்குகிறது.

தாய்லாந்தை பொறுத்தவரையில், விவசாயத்தில் அதிக முதலீடு செய்துள்ள ஒரு நாடு ஆகும். எனவே பயிர் பல்வகைப்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் காலநிலை மாற்ற பிரச்னைகளுக்கு ஏற்ப புதுமையான தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை பெறுவதற்கும், பரிமாறி கொள்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மாநாட்டை அது கருதுகிறது.
COP28 மாநாட்டில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமைத்துவத்திற்கு பட்சரவத் வோங்சுவான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் காலநிலை மாற்றத்தின் பல்வேறு பிரச்னைகளை நிவர்த்தி செய்ய தேவையான அம்சங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அர்ப்பணிப்பிற்காக தனியாகவும், பட்சரவத் வோங்சுவான் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை, தங்களது நட்பு நாடுகளுடன், காலநிலை கொள்கை மற்றும் உத்திகள் பற்றிய நுண்ணறிவுகளை பகிர்ந்து கொள்வதற்கு, இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது அவரது கருத்து. காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் கூட்டுணர்வை அவரது இந்த கருத்து அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இதற்கிடையே காலநிலை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்ள ஏதுவாக, உலகின் பல்வேறு நாடுகளும் ஒருங்கிணைந்து, நிதி வழங்கியுள்ளன. இதற்கு ஆதரவாக இருந்த நாடுகளுக்கு, பட்சரவத் வோங்சுவான் நன்றியையும் தெரிவித்து கொண்டார். காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளால், எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இதற்கும் பட்சரவத் வோங்சுவான் நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார். இந்த தருணத்தில், கடல் நீர்மட்டம் உயர்வு மற்றும் கடலோர அரிப்பு போன்ற பிரச்னைகளால், தாய்லாந்து எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது? என்பதையும் அவர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தத்தில், முன்னோக்கி செல்லும் பாதை மிகவும் சிக்கலானதாக இருந்தாலும் கூட, உலகளாவிய சமூகத்தின் கூட்டு விருப்பமும், ஒருங்கிணைந்த முயற்சிகளும், பசுமையான மற்றும் பாதுகாப்பான உலகத்தை நோக்கி நம்மை நிச்சயமாக வழிநடத்தும் என்பதை இந்த மாநாடு நினைவூட்டுகிறது என பட்சரவத் வோங்சுவான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications