தென் துருவத்தையும் விட்டு வைக்காத கொரோனா.. அன்டார்டிகாவுக்கு பறந்த தடுப்பூசி... அதிரடி காட்டும் சிலி
சாண்டியாகோ: சிலி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தத் தென் துருவத்திற்கு கொரோனா தடுப்பூசி எடுத்துச் செல்லப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா காரணமாகப் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சிலி அரசு
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால். தென் அமெரிக்கா நாடான சிலி தன்னுடைய நாட்டில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. சுமார் 1.7 கோடி மக்கள்தொகையைக் கொண்டு சிலி நாட்டில் தற்போது வரை 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் தடுப்பூசி செலுத்தும் பணிகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

தென் துருவத்தில் தடுப்பூசி
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிலி அடுத்த லெவலுக்கே சென்றுவிட்டது. உலகிலேயே மிகவும் குளிரான, அதிக பனிப்பாறைகளைக் கொண்ட கண்டமாக இருப்பது தென் துருவம். இங்குப் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முகாமிட்டு இருப்பார்கள்.

கொரோனா தடுப்பூசி
அங்கு முகாமிட்டு இருக்கும் சிலி ஆராய்ச்சியாளர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை அந்நாட்டு அரசு செலுத்தியுள்ளது. முதல்கட்டமாக அங்கு இருக்கும் 25 முதல் 58 வயது வரை இருக்கும் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இதுவரை எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. தென் துருவத்தில் இன்னும் 53 பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளதாக சிலி அரசு அறிவித்துள்ளது.

தென் துருவத்தில் கொரோனா பரவல்
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடைசியாகப் பாதித்த கண்டமாகத் தென் துருவம் உள்ளது. அங்கு அமைந்துள்ள சிலி நாட்டு ராணுவ முகாமில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுற்றுலாப் பயணிகள் உட்பட தேவையில்லாத நபர்கள் தென் துருவத்தில் இருந்து சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications