தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா.. கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் சீனா?
பீஜிங்: பல உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் நோய் தற்போது அடங்கியுள்ளது. எனினும் சீனாவில் இந்த வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா விழிபிதுங்கி வருகிறது.
உலக அளவில் பெரும் பொருளாதார பாதிப்பு, உயிரிழப்பு என கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இந்த நோய்த்தொற்று பரவியது. அடுத்த சில மாதங்களில் உலகமெங்கும் இந்த வைரஸ் பரவியது.
சீனாவில் 6 மாதத்துக்கு பின் மீண்டும் கொரோனா மரணங்கள்: 'ஜீரோ-கோவிட்' கொள்கை தோற்றுவிட்டதா?
தடுமாறிய உலக நாடுகள்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தடுமாறிய உலக நாடுகள், சீனா கடைப்பிடித்த பொதுமுடக்கம் போன்றவற்றை அமல்படுத்தி பார்த்தது. ஆனாலும் கொரோனா வைரசின் பரவல் நிற்கவில்லை. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்ட பிறகே தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இயல்பு நிலை திரும்பியது
பொது முடக்கம், சமூக இடைவெளி போன்றவை தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக அது பலனளிக்கவில்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் வாதமாக இருக்கிறது. தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு பாதிப்பு குறைந்து இருக்கிறது. இதனால், பொது முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டு கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலையை பெரும்பாலும் எட்டிவிட்டது.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா
ஆனால், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் அந்த வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவை பொறுத்தவரை ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. உலகின் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட முதல் நாடு சீனா என்றாலும் அந்த நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,97,516- என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
மிகக்கடுமையான கட்டுப்பாடுகள்
பெரிய மெட்ரோ நகரங்களில் கூட ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அந்த நகரத்தை முடக்கும் சீனா, மாஸ் டெஸ்டிங் செய்வதோடு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் தடை விதித்து விடுகிறது. மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அதையும் மீறி சீனாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல மீண்டும் தலை தூக்கி வருகிறது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது.
ஜீரோ கோவிட் பாலிசிக்கு எதிராக
அதேபோல் பாதிப்பு எண்ணிக்கையும் கிடு கிடுவென உயர்ந்து சீனாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சீனாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 31,527- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த போது கூட அங்கு 28 ஆயிரம் பேருக்கு தான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. சீனா பின்பற்றி வரும் ஜீரோ கோவிட் பாலிசிக்கு எதிராக ஒருபக்கம் அந்நாட்டில் போராட்டங்களும் வெடித்து வருகின்றன.
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை
இந்த போராட்டங்களையும் கடும் நடவடிக்கைகள் எடுத்து சீனா அடக்குமுறை செய்கிறது. தற்போது சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்பதையே இந்த சமீபத்திய பாதிப்புகள் காட்டுவதாகவும் ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
இதற்கிடையே, சீனா தனது ஜிரோ கோவிட் பாலிசி என்ற யுக்தியை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது. பிற நாடுகள் எல்லாம் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்ட போதிலும் சீனா மட்டும் தனது 'டைனமிக் ஜீரோ' என்ற கொள்கையில் விடாப்பிடியாய் நிற்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்த ஜீரோகோவிட் கொளகையே சரி என்றும் இல்லாவிடில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் சீனாவின் வாதமாக இருக்கிறது. .
10 லட்சம் பேருக்கு 3 பேர்
சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5,200 ஆக உள்ளது. 10 லட்சம் பேருக்கு 3 என்ற அளவில்தான் இது உள்ளது. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 10 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் மற்றும், 2,400 என்ற அளவில் உள்ளது. சீனா கையாண்டு வரும் இந்த கடுமையான ஜீரோகோவிட் கொள்கையால் கடும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. சீனாவின் தொழில்நுட்பத்துறை கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது.
அதிகரிக்கும் ஒமிக்ரான் பரவல்
சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டுகளில் 3.9 சதவிகிதம் என்ற அளவிலே உள்ளது. பாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் ஐபோன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. கொரோனாவின் துவக்க காலத்தில் ஜிரோ கோவிட் பாலிசி மூலம் சிறப்பாக கையாண்ட சீனாவால் தற்போதைய ஒமிக்ரான் வகை பரவலால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜிரோகோவிட் பாலிசி என WHO கருதுவது ஏன்?
ஒமிக்ரான் வகை கொரோனா செயல்படும் விதத்தையும் மாற்றிக்கொண்டுள்ளது. அதிவேகமாக பரவும் தன்மை இந்த ஒமிக்ரான் சீனா முழுவதும் பரவியுள்ளது. எனவே, சீனாவும் தனது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வருவது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனாலும் இதை ஏற்க மறுக்கும் சீனா, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் படி செய்தால் உயிரிழப்பு ஏற்படுவது அதிக அளவில் இருக்கும் என்று கூறி வருகிறது.
தடுப்பூசிதான் தீர்வா?
சீனாவில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதியளவு பேர்தான் தடுப்பூசியை செலுத்தியிருக்கின்றனர். 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கள்தான் பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். 60-69 வயது வரம்பில் உள்ளவர்களில் 60 சதவீதத்திற்கும் குறைவான பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வயதானவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் சீனா வலியுறுத்தி வருகிறது. சீனாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சினோவேக், சினோபார் ஆகிய தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்தும் சந்தேகங்கள் எழாமல் இல்லை.