காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுமாம்.. குண்டைப் போடும் விஞ்ஞானிகள்.. ஆய்வில் புதிய தகவல்
ஜெனிவா: கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுகிறது என்று 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், உலக சுகாதார நிறுவனம் காற்றில் பரவாது என்று தெரிவித்து வருகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தும்மும்போது, இருமும்போது அவர்களிடம் இருந்து வெளியேறும் சிறிய நீர்த் திவலைகளில் இருந்து கொரோனா வைரஸ் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் காற்றின் மூலமும் வைரஸ் பரவும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில் அடுத்த வாரம், இவர்கள் தங்களது ஆய்வை அறிவியல் இதழில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதியில் ஹூ
ராய்டர் செய்தியில் வெளியாகி இருந்த இந்த தகவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் உடனடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை. தும்மும்போது வெளியேறும் சிறிய நீர்த்திவலைகள் காற்றில் கலக்கிறது. காற்றில் வைரஸ் கலக்கிறது. அந்தக் காற்றை நுகரும் மற்றவர்களுக்கும் வைரஸ் தொற்று பரவுகிறது என்று விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

சாட்சியங்கள் இல்லை
ஆனால் முன்பு கருத்து தெரிவித்து இருந்த உலக சுகாதார நிறுவனம், ''காற்றில் கொரோனா வைரஸ் பரவும் என்பதை நம்புவது மாதிரியாக இல்லை'' என்று தெரிவித்து இருந்தது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்ப தலைவரும், மருத்துவருமான பெனிடெட்டா கூறுகையில், ''கடந்த இரண்டு மாதங்களாகவே காற்றில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற கருத்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதை உறுதி செய்யும் வகையில் எந்த சான்றுகளும் இதுவரை இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் வீரியம்
கடந்த மார்ச் மாதம் வெளியாகி இருந்த பல்வேறு ஆய்வுகளிலும் காற்றின் மூலம் வைரஸ் பரவும் என்று கூறப்பட்டு இருந்தது. அதாவது, காற்றில் மூன்று மணி நேரம் வரை இருக்கும் என்றும், பொருட்களின் மீது படிந்தால் ஒரு நாள் வரை வீரியத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. கார்ட்போர்டு சீட்டில் பட்டால் 24 மணி நேரம் வரை வைரஸ் இருக்கும் என்றும், பிளாஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் படிந்தால் மூன்று நாட்களுக்கு வீரியத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Recommended Video

சீனாவில் காற்றில் பரவிய வைரஸ்
இதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த ஜனவரி மாதம் சீனாவின் உணவகத்தில் ஒருவர் உணவருந்தும்போது, தும்மி இருக்கிறார். இவருக்கு கொரோனா வைரஸ் இருந்து இருக்கிறது. இதையடுத்து மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு எப்படி வந்தது என்று ஆய்வு செய்தபோது, அவர்கள் மூவரும், முதலில் தும்மியவருடன் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தி இருப்பது தெரிய வந்தது. அந்த உணவகத்தில் ஏசியும் அப்போது பயன்பாட்டில் இருந்து இருக்கிறது. இதனால்தான் ஏசி அறையில் கொரோனா நோயாளிகள் இருந்து, அவர்கள் தும்மினால் அல்லது இருமினால் கொரோனா வைரஸ் பரவும் என்று கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications