காஸா மீது விடிய விடிய தாக்குதல் நடத்தி இஸ்ரேல் வெறியாட்டம்.. 247 பேர் பலி; 2 ஆயிரம் பேர் படுகாயம்!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகள் மீது 10வது நாளாக இஸ்ரேல் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் கொடூர தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை கடந்த 10 நாட்களாக நடத்தி வருகிறது. காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
யுத்த நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று மட்டும் 5 மணி நேர யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிரந்த யுத்த நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பேச்சுவார்த்தை
ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து காஸா பகுதிகள் மீது விடிய விடிய இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.
பலி எண்ணிக்கை 247
நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆயிரம் பேர் படுகாயம்
இதில் 50க்கும் மேற்பட்டோர் பச்சிளங்குழந்தைகள். மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உடல் உறுப்புகளை இழந்து, படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளும் இலக்கு
ஆனால் இஸ்ரேலோ மருத்துவமனைகளையும் கூட குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நீடித்து வருகிறது.