வேலையை காட்டும் Deepseek.. அருணாச்சல் குறித்த கேள்விக்கு சீனாவுக்கு ஆதரவு? வெடித்த சர்ச்சை
பெய்ஜிங்: சீனா உருவாக்கிய டீப்சீக் ஏஐ மாடல் குறித்தே இப்போது உலகெங்கும் பேச்சு உள்ளது. இவ்வளவு அதிநவீன வசதிகளை இவ்வளவு குறைந்த செலவில் சீனாவால் எப்படி உருவாக்க முடிந்தது என்பது பலரும் வியக்கும் விஷயமாக உள்ளது. இருப்பினும், இந்த மாடல் பக்கச்சார்புடன் சீனாவுக்கு ஆதரவான பதில்களை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் உலகெங்கும் ஏஐ டூல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதை சாட்ஜிபிடி தொடங்கி வைத்த நிலையில், தொடர்ந்து ஜெமினி, மெட்டா ஏஐ என அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின.

இந்த ஆதிக்கத்தை காலி செய்யும் வகையில் இப்போது சீனா நிறுவனம் டீப்சீக் என்ற ஏஐ கருவியை உருவாக்கியுள்ளது. உலகெங்கும் பலரும் இதன் திறனை வியந்து பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையே இந்த டீப்சீக் ஏஐ மாடல் தொடர்பான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
சர்ச்சை பதில்:
பல யூசர்கள் டீப்சீக் ஏஐ மாடலிடம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டு டெஸ்ட் செய்து வருகிறார்கள். அதற்கு டீப்சீக் ஏஐ மாடல் அளிக்கும் பதில்கள் தான் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. குறிப்பாகக் கேள்விகளுக்கு அது சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட நபரைப் போலவே பதிலளிக்கிறதாம். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விக்கு டீப்சீக் பதில் அளிக்க மறுத்துவிடுகிறது.
பதில் சொல்ல மறுப்பு:
அதாவது நெட்டிசன் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த டீப்சீக் ஏஐ, "மன்னிக்கவும்.. அது தற்போது எனது அறிவு எல்லைக்கு அப்பாற்பட்ட கேள்வி. நாம் வேறு எதையாவது பேசுவோம்" என வருகிறது. அதேபோல இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்துச் சொல்லுங்கள் எனக் கேட்ட போதும், டீப்சீக் அதே மழுப்பலான பதிலைத் தருகிறது. இதுபோன்ற பதில்கள் டீப்சீக் ஏஐ அமைப்பு எந்தளவுக்கு பக்கச்சார்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையே காட்டுவதாகப் பலரும் சாடி வருகிறார்கள்.
சீன ஆதரவு:
அருணாச்சல பிரதேசம் என்பது இந்தியாவின் ஒரு பகுதியாகும். ஆனால், அதை அங்கீகரிக்க மறுக்கும் சீனா, அருணாச்சல பிரதேசம் தனது நாட்டிற்குச் சொந்தமானது என்றும் திபெத்தின் ஒரு பகுதி என்றும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறி வருகிறது. இப்போது டீப்சீக் கூட பதிலளிக்காமல் மழுப்புவது சீனாவுக்கு ஆதரவாகவே இருப்பதாகப் பலரும் சாடி வருகிறார்கள்.
மத்திய அரசு:
சீனா தொடர்ச்சியாக அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்றே கூறி வந்தது. அதற்கு மத்திய வெளியுறவுத் துறை கடந்த மார்ச் மாதம் அளித்திருந்த விளக்கத்தில், "அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் அப்படியே இருக்கும். அங்கு வாழும் மக்கள் நமது வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களால் தொடர்ந்து பயனடைவார்கள்" என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் சீனாவின் கூற்றுகள் அபத்தமானது என்றும் ஆதாரமற்றது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications