அல் பக்தாதி 'அவுட்' ஆனாலும் ஐ.எஸ். அமைப்பை உயிர்ப்போடு வைத்திருக்கும் சதாமின் 'சகா'க்கள்!
பாக்தா: உலகின் மிக கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் தலைவர் அல் பக்தாதி இறந்து போனாலும் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சகாக்களால் அந்த அமைப்பு வலுவானதாகத்தான் நீடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனம் செய்திருக்கிறது ஐ.எஸ். இயக்கம். இதன் தலைவராக அதாவது கலிபாவாக அல் பக்தாதி பிரகடனம் செய்யப்பட்டார்.
இந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான அதன் நேசநாடுகளின் கூட்டுப்படை போரிட்டு வருகிறது. இப்படைகளில்தாக்குதலில்தான் பக்தாதி படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்ததாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
எதிர்காலம் என்ன?
பக்தாதி மரணமடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் ஐ.எஸ். இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஐ.எஸ். இயக்கம் உருவாக்கப்படும்போது அது வலுவான கட்டமைப்புகள், அடுத்த கட்டத் தலைவர்களைக் கொண்டுதான் செயல்படத் தொடங்கியது.
சதாம் சகாக்கள்
ஈராக்கில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு அவரது சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்த பின்னர் அவரது ஆட்சியிலும் பாத் கட்சியிலும் இந்த முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் இணைந்து உருவாக்கியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு.
ஐ.எஸ். இயக்கத்துக்கு ஸ்கெட்ச்
சதாம் உசேன் அதிபராக இருந்த துணை அதிபராக இருந்த இஜாத் அல் தெளரி தலைமையில் ஒரு ஆயுதக் குழு உருவானது. அதன் பின்னர் மெல்ல மெல்ல ஐ.எஸ். இயக்கம் உருவெடுத்தது.
இதன் மூளையாக இருந்தவர் சதாம் ஆட்சிக் கால உளவுத் துறை அதிகாரியான சமிர் பத் முகம்மது அல் கலிஃபா என்ற ஹாஜி பக்கர்தான்.
இவர்தான் ஐ.எஸ். இயக்கம் எப்படி இருக்க வேண்டும்.. என்பதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தவர்.. இதை ஒன் இந்தியா தமிழில் நாம் பிரசுரித்திருந்தோம். (/news/international/iraqi-officer-under-saddam-masterminded-the-rise-isis-reports-225099.html).
ஐ.எஸ். இயக்கத்தின் மூளையாக இருந்த சமிர் அப்த் 2014ஆம் ஆண்டு தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தார். இருந்த போதும் அல் பக்தாதி தலைமையில் ஐ.எஸ். இயக்கம் ஆக்ரோஷமானதாகத்தான் செயல்பட்டு வந்தது.
அல் பக்தாதி தலைமை
அல் பக்தாதி தலைமையின் கீழ் ஈராக், சிரியா நாடுகளின் பெரும்பகுதிகளை ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியது. கிறிஸ்துவர்கள் மற்றும் யாசிதிகளுக்கு எதிராக மிகக் கொடூரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால்தான் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக களமிறங்கின.
அழிந்துவிடாதாம்..
தற்போது பக்தாதி அழிக்கப்பட்டிருந்தாலும் எண்ணற்ற சன்னி முஸ்லிம் தலைவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஹாஜி பக்கரால் இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாதிகள் அடுத்த கட்ட தலைவர்களாக இருக்கின்றனர்.. அத்துடன் ஈராக் ராணுவத்திலேயே ஒரு பிரிவினர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் சில நகரங்களை ஈராக்கிய அரசு படைகள் இழக்க நேரிட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனால் ஐ.எஸ். இயக்கம் ஆட்டம் கண்டுவிடும் என்பதோ அழிந்துவிடும் என்பதோ அப்படி ஒன்றும் எளிதானது அல்ல என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.. ஈராக், சிரியாவில் தொடர்ந்தும் அமைதியை சீர்குலைப்பதிலும் புதிய நகரங்களை கைப்பற்றுவதிலும் முன்னைவிட மும்முரமாகவும் பழிவாங்கும் வகையிலும்தான் ஐ.எஸ். செயல்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.