"இஸ்ரேலுக்கு உதவினால் விளைவுகள் மோசமாக இருக்கும்!" ஈரான் வார்னிங்! உடனே அமெரிக்காவுக்கு பறந்த மெசேஜ்
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு உதவினால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் ஹமாஸ் இடையே முதலில் வெடித்த போர், அடுத்து இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இடையே மாறியது.

ஹிஸ்புல்லா: ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரானும் உள்ளே வர இப்போது பதற்றமான சூழலே நிலவுகிறது. ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதற்கு இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என்று அஞ்சப்படுவதாலேயே அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தான் ஈரான் தனது அண்டை நாடுகளுக்கும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. அதாவது தங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உதவினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்கு ரகசிய ராஜதந்திர சேனல்கள் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நாடுகளில் எல்லாம் அமெரிக்கப் படைகள் உள்ள நிலையில், சரியாக அந்த நாடுகளுக்கு மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன: முன்னதாக ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட், "எங்கள் மீதான நடத்திய தாக்குதலுக்கு விலையைக் கொடுக்க நேரிடும்.. எங்கள் பதிலடி துல்லியமானதாகவும் ஆபத்தானதாகவும், குறிப்பாக யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியமாக இருக்கும். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்பே சேதம் ஏற்பட்டு இருக்கும்" என்று கூறியிருந்தார்.
இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. ஈரான் மீது இஸ்ரேல் அணு குண்டை வீசலாம் என்று பேச்சுகளும் எழுந்தது. உடனடியாக அமெரிக்க அதிபர் பைடன் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இந்த பின்னணியில் தான் ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அண்டை நாடுகள்: அண்டை நாடுகளும் இந்த பிரச்சினைக்குள் வர விரும்பவில்லையாம். தங்கள் நாட்டில் உள்ள ராணுவ உள்கட்டமைப்பு அல்லது வான்வெளியை ஈரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்த அனுமதித்து இந்த பெரிய மோதலுக்குள் சிக்க விரும்பவில்லை என்று இந்த நாடுகள் அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்கா வெளிப்படையாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றம் குறித்தும் அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், ஈரான் முக்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.
பதறுவது ஏன்: இஸ்ரேல்- ஈரான் இடையே இப்போது மோதல் இருந்தாலும் முழு வீச்சிலான போர் இல்லை. இரு தரப்பிற்கும் இடையே நேரடியாகப் போர் வெடித்தால் அது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாகக் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட இது காரணமாக இருக்கும். இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் உள்ளது.












Click it and Unblock the Notifications