சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. "ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கதை".. இப்படி போய் வசமா மாட்டிக்கிட்டாங்களே!
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. அதேபோல இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று முதன் முறையாக சீனாவின் வூஹான் நகரில் இருந்துதான் பரவத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக சீனா முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. உலகில் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள சீனாவில் இந்த கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தொற்று உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன.

கட்டுப்பாடுகள்
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் 5 லட்சம் 10 லட்சம் என உயிரிழப்புகள் பதிவாகி இருந்த நிலையில் சீனாவில் வெறும் 5 ஆயிரத்து சொச்சம் என்கிற அளவில்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதற்கு காரணம் சீனா தொடக்கத்திலிருந்து பின்பற்றி ஜீரோ கோவிட் கொள்கைதான். ஒரு பகுதியில் ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி முழுவதும் முடக்கப்படும். தொற்று அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் உள்ள உணவகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும். ஆக இப்படியாக தொற்று பாதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தது.

எதிர்ப்பு
இதற்கு மற்றொரு முக்கிய காரணம், சீனாவில் அதிக அளவில் வயதானவர்கள் இருப்பதுதான். அதாவது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 11.9 சதவிகிதம் பேர் வயதானவர்களாவார்கள். உலகம் முழுவதும் வேறு எந்த நாட்டை காட்டிலும் சீனாவில்தான் வயதானோர் எண்ணிக்கை அதிகம். எனவே கட்டுப்பாட்டை தளர்த்தினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று சீனாவுக்கு தெரியும். அதனால்தான் இந்த கட்டுப்பாடுகள். ஆனால் இந்த கட்டுப்பாடுகள் கடுமையான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. வகுப்புகள் ஆண்லைன் வாயிலாக நடந்து வந்தன. இதனை எதிர்த்தது சமீபத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

போராட்டங்கள்
உலகம் முழுவதும் கொரோனாவுடன் வாழ பழகிக்கொண்டிருக்கையில் சீனா மட்டும் ஏன் அதீத கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது என்கிற கேள்வியை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பொதுமக்களும் இணைந்துகொண்டதால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் தீயாய் பரவியது. அதிபர் ஜி ஜிங்பிங் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உயிரிழப்பு
இது தொடர்பாக வெளிவந்துள்ள சில வீடியோக்களில் மருத்துவமனையில் இடமின்றி நோயாளிகள் கீழே படுக்க வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதேபோல டிசம்பர் 4ம் தேதிக்கு பின்னர் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் இது போன்று தொற்று பாதிப்பு அதிகரித்தது. அதன் பின்னர் ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பின்னர் இந்த பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

காரணம்
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "மற்ற நாடுகள் கொரோனா தொற்றை அனுமதித்தன் மூலம் லட்சக்கணக்கில் உயிர்களை பலிகொடுத்தன. அதன் விளைவு மீத மிருந்த மக்களுக்கு ஓரளவு நோயெதிர்ப்பு திறன் கிடைத்தது. இத்துடன் தடுப்பூசிகள் தொற்று பாதிப்பை தடுக்க உதவி செய்தன. ஆனால் சீனாவில் ஆரம்பத்திலிருந்து பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படாத நிலையில் இயற்கையிலேயே இவர்களுக்கு நோயெதிர்ப்பு திறன் கிடைக்கவில்லை. மறுபுறம் வெறும் தடுப்பூசியை மட்டுமே இவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். எனவே தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் தொற்று வேகமாக பரவி வருகிறது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications